பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருமயிலாடுதுறை
வ.எண் பாடல்
1

கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.

2

உர வெங்கரியின் உரி போர்த்த
பரமன் உறையும் பதி என்பர்
குரவம், சுரபுன்னையும், வன்னி,
மருவும் மயிலாடுதுறையே.

3

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்,
ஞானப்பொருள் கொண்டு அடி பேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு
ஆன மயிலாடுதுறையே!

4

அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும், பிணி ஆயினதானே.

5

தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.

6

தொண்டர் இசை பாடியும் கூடிக்
கண்டு துதி செய்பவன் ஊர் ஆம்
பண்டும் பல வேதியர் ஓத,
வண்டு ஆர் மயிலாடுதுறையே.

7

அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

8

சிரம் கையினில் ஏந்தி இரந்த
பரம் கொள் பரமேட்டி, வரையால்
அரங்க அரக்கன் வலி செற்ற,
வரம் கொள் மயிலாடுதுறையே.

9

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும்,
கோலத்து அயனும், அறியாத
சீலத்தவன் ஊர் சிலர் கூடி
மாலைத் தீர் மயிலாடுதுறையே.

10

நின்று உண் சமணும், நெடுந் தேரர்,
ஒன்று அறியாமை உயர்ந்த
வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம்
மன்றல் மயிலாடுதுறையே.

11

நயர் காழியுள் ஞானசம்பந்தன்
மயர் தீர் மயிலாடுதுறைமேல்
செயலால் உரை செய்தன பத்தும்
உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.