பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்புத்தூர்
வ.எண் பாடல்
1

வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை
திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர்,
கங்கை தங்கும் முடியார் அவர்போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

2

வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத்
தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர்,
ஊனம் இன்றி உறைவார் அவர் போலும்
ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.

3

பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

4

நாற விண்ட நறுமாமலர் கவ்வி,
தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர்,
ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

5

இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத்
திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர்,
பசை விளங்கப் படித்தார் அவர் போலும்
வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.

6

வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி,
தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர்,
ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும்
வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.

7

நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும்
செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர்,
தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும்
மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

8

கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத்
திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர்
இருக்க வல்ல இறைவர் அவர் போலும்
அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

9

மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமான் அவன்போலும்
பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

10

கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல்
தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர்,
ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும்
ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.

11

நல்ல கேள்வி ஞானசம்பந்தன்
செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும்
அல்லல் தீரும்; அவலம் அடையாவே.