பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில் சோலை திங்களோடு திளைக்கும் திருப்புத்தூர், கங்கை தங்கும் முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே.
வேனல் விம்மு வெறி ஆர் பொழில் சோலைத் தேனும் வண்டும் திளைக்கும் திருப்புத்தூர், ஊனம் இன்றி உறைவார் அவர் போலும் ஏனமுள்ளும் எயிறும் புனைவாரே.
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட, தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர், ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும் தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.
நாற விண்ட நறுமாமலர் கவ்வி, தேறல் வண்டு திளைக்கும் திருப்புத்தூர், ஊறல் வாழ்க்கை உடையார் அவர் போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
இசை விளங்கும் எழில் சூழ்ந்து, இயல்பு ஆகத் திசை விளங்கும் பொழில் சூழ் திருப்புத்தூர், பசை விளங்கப் படித்தார் அவர் போலும் வசை விளங்கும் வடி சேர் நுதலாரே.
வெண் நிறத்த விரையோடு அலர் உந்தி, தெண் நிறத்த புனல் பாய் திருப்புத்தூர், ஒண் நிறத்த ஒளியார் அவர் போலும் வெண் நிறத்த விடை சேர் கொடியாரே.
நெய்தல், ஆம்பல், கழுநீர், மலர்ந்து எங்கும் செய்கள் மல்கு சிவனார் திருப்புத்தூர், தையல் பாகம் மகிழ்ந்தார் அவர் போலும் மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.
கருக்கம் எல்லாம் கமழும் பொழில் சோலைத் திருக்கொள் செம்மை விழவு ஆர் திருப்புத்தூர் இருக்க வல்ல இறைவர் அவர் போலும் அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.
மருவி எங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறும் திளைக்கும் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமான் அவன்போலும் பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.
கூறை போர்க்கும் தொழிலார், அமண், கூறல் தேறல் வேண்டா; தெளிமின்! திருப்புத்தூர், ஆறும் நான்கும் அமர்ந்தார் அவர்போலும் ஏறு கொண்ட கொடி எம் இறையாரே.
நல்ல கேள்வி ஞானசம்பந்தன் செல்வர் சேடர் உறையும் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கு என்றும் அல்லல் தீரும்; அவலம் அடையாவே.