பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வடி கொள் மேனியர், வான மா மதியினர், நதியினர் மது ஆர்ந்த கடி கொள் கொன்றை அம் சடையினர், கொடியினர், உடை புலி அதள் ஆர்ப்பர், விடை அது ஏறும் எம்மான், அமர்ந்து இனிது உறை விற்குடி வீரட்டம், அடியர் ஆகி நின்று, ஏத்த வல்லார் தமை அருவினை அடையாவே.
களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி, உளம் கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்; பொரு கரி உரி போர்த்து விளங்கு மேனியர்; எம்பெருமான்; உறை விற்குடி வீரட்டம், வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே.
கரிய கண்டத்தர், வெளிய வெண்பொடி அணி மார்பினர், வலங்கையில் எரியர், புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய வேடத்தர், விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி வீரட்டம் பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர், உலகத்தே.
பூதம் சேர்ந்து இசைபாடலர், ஆடலர், பொலிதர, நலம் ஆர்ந்த பாதம் சேர் இணைச்சிலம்பினர், கலம் பெறு கடல் எழு விடம் உண்டார், வேதம் ஓதிய நா உடையான், இடம் விற்குடி வீரட்டம் ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ, பிணி தீவினை கெடும் ஆறே?
கடிய ஏற்றினர், கனல் அன மேனியர், அனல் எழ ஊர் மூன்றும் இடிய மால்வரை கால் வளைத்தான், தனது அடியவர்மேல் உள் வெடிய வல்வினை வீட்டுவிப்பான், உறை விற்குடி வீரட்டம் படியது ஆகவே பரவுமின்! பரவினால், பற்று அறும், அருநோயே.
பெண் ஒர் கூறினர்; பெருமையர்; சிறுமறிக் கையினர்; மெய் ஆர்ந்த அண்ணல்; அன்பு செய்வார் அவர்க்கு எளியவர்; அரியவர், அல்லார்க்கு விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடி வீரட்டம் எண் நிலாவிய சிந்தையினார் தமக்கு இடர்கள் வந்து அடையாவே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
இடம் கொள் மாகடல் இலங்கையர் கோன் தனை இகல் அழிதர ஊன்று திடம் கொள் மால்வரையான், உரை ஆர்தரு பொருளினன், இருள் ஆர்ந்த விடம் கொள் மா மிடறு உடையவன், உறைபதி விற்குடி வீரட்டம் தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார் தமைத் துன்பம் நோய் அடையாவே.
செங்கண் மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறைபுனல் முடி ஆர்ந்த, வெங் கண் மால்வரைக்கரி உரித்து உகந்தவன் விற்குடி வீரட்டம் தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே.
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரி துவர் ஆடையர், அவர் வார்த்தை பண்டும் இன்றும் ஓர் பொருள் எனக் கருதன் மின்! பரிவு உறுவீர், கேண்மின்; விண்ட மா மலர்ச் சடையவன் இடம் எனில், விற்குடிவீரட்டம்; கண்டு கொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்து உறும் குணத்தாரே.
விலங்கலே சிலை இடம் என உடையவன், விற்குடிவீரட்டத்து இலங்கு சோதியை, எம்பெருமான் தனை, எழில் திகழ் கழல் பேணி, நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ்மாலை வலம் கொடே இசை மொழியுமின்! மொழிந்தக்கால், மற்று அது வரம் ஆமே.