பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருந்த மதி சூடி, தெண் நீர் சடைக் கரந்து, தேவி பாகம் பொகுந்தி, பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இனவண்டு யாழ்செய், குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தணசாரல், குறும்பலாவே.
நாள்பலவும் சேர் மதியம் சூடிப் பொடி அணிந்த நம்பான், நம்மை ஆள்பலவும் தான் உடைய அம்மான், இடம்போலும் அம் தண்சாரல், கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு, விண்ட கோள் பலவின் தீம் கனியை மாக் கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே.
வாடல் தலைமாலை சூடி, புலித்தோல் வலித்து வீக்கி, ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம்போலும் அம் தண் சாரல், பாடல் பெடைவண்டு போது அலர்த்த, தாது அவிழ்ந்து, பசும்பொன் உந்திக் கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண்சாரல் குறும்பலாவே.
பால் வெண்மதி சூடி, பாகத்து ஓர் பெண் கலந்து, பாடி, ஆடி, காலன் உடல் கிழியக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ் வெற்பில், நீலமலர்க்குவளை கண் திறக்க, வண்டு அரற்றும் நெடுந் தண்சாரல், கோல மடமஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே.
தலை வாள்மதியம் கதிர் விரிய, தண்புனலைத் தாங்கி, தேவி முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம்போலும் முது வேய் சூழ்ந்த மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல், குலைவாழைத் தீம்கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே.
நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர், தண்மதியர், நெற்றிக்கண்ணர், கூற்று ஏர் சிதையக் கடிந்தார், இடம்போலும் குளிர் சூழ் வெற்பில், ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூஞ்சாரல், கோல் தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும் குறும்பலாவே.
பொன் தொத்த கொன்றையும் பிள்ளைமதியும் புனலும் சூடி, பின் தொத்த வார்சடை எம்பெம்மான் இடம்போலும் பிலயம் தாங்கி, மன்றத்து மண்முழவம் ஓங்கி, மணி கொழித்து, வயிரம் உந்தி, குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே.
ஏந்து திணி திண்தோள் இராவணனை மால்வரைக்கீழ் அடர ஊன்றி, சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம்போலும் சாரல்சாரல், பூந் தண் நறு வேங்கைக் கொத்து இறுத்து, மத்தகத்தில் பொலிய ஏந்தி, கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே.
அரவின் அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல், சென்னி விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் விரிபூஞ்சாரல், மரவம் இரு கரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த, குரவம் முறுவல் செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே.
மூடிய சீவரத்தர், முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமணைக் காய்ந்தார் இடம்போலும் கல் சூழ் வெற்பில் நீடு உயர் வேய் குனியப் பாய் கடுவன் நீள்கழைமேல் நிருத்தம் செய்ய, கூடிய வேதுவர்கள் கூய் விளியா, கை மறிக்கும் குறும்பலாவே.
கொம்பு ஆர் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல், நம்பான், அடி பரவும் நால்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன இன்பு ஆய பாடல் இவைபத்தும் வல்லார், விரும்பிக் கேட்பார் தம்பால தீவினைகள் போய் அகலும்; நல்வினைகள் தளரா அன்றே.