பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி, மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான் மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப் பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை, வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம் உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.
எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை, மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச் செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம் பழியாமைப் பண் இசைஆன பகர்வானை; வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக் கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை, மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப் பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை, மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே
சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும், கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க வல்லார், நல் மா தவர், ஏத்து மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை, வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை, மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி, பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.