பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருச்சேறைச் செந்நெறி
வ.எண் பாடல்
1

பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
கூரிது ஆய அறிவு கைகூடிடும்-
சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
நாரிபாகன்தன் நாமம் நவிலவே.

2

என்ன மா தவம் செய்தனை!- நெஞ்சமே!-
மின்னுவார் சடை வேத விழுப்பொருள்,
செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
மன்னு சோதி, நம்பால் வந்து வைகவே.

3

பிறப்பு, மூப்பு, பெரும் பசி, வான் பிணி,
இறப்பு, நீங்கிடும்; இன்பம் வந்து எய்திடும்-
சிறப்பர் சேறையுள் செந்நெறியான் கழல்
மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே.

4

மாடு தேடி, மயக்கினில் வீழ்ந்து, நீர்,
ஓடி எய்த்தும், பயன் இலை; ஊமர்காள்!
சேடர் வாழ் சேறைச் செந்நெறி மேவிய
ஆடலான் தன் அடி அடைந்து உய்ம்மினே!

5

எண்ணி நாளும், எரி அயில் கூற்றுவன்
துண்ணென்று ஒன்றில்- துரக்கும் வழி கண்டேன்;
திண் நன் சேறைத் திருச் செந்நெறி உறை
அண்ணலார் உளர்: அஞ்சுவது என்னுக்கே?

6

தப்பி வானம், தரணி கம்பிக்கில் என்?
ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்?
செப்பம் ஆம் சேறைச் செந்நெறி மேவிய
அப்பனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

7

வைத்த மாடும், மடந்தை நல்லார்களும்,
ஒத்து ஒவ்வாத உற்றார்களும், என் செய்வார்?
சித்தர் சேறைத் திருச் செந்நெறி உறை
அத்தர்தாம் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

8

குலன்கள் என் செய்வ? குற்றங்கள் என் செய்வ?
துலங்கி நீ நின்று சோர்ந்திடல், நெஞ்சமே!
இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
அலங்கனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே?

9

பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
விழவிடாவிடில், வேண்டிய எய்த ஒணா;
திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
அழகனார் உளர்; அஞ்சுவது என்னுக்கே!

10

பொருந்து நீள் மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி, மலர் அடி வாங்கினான்
திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே.