பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கோடிகா
வ.எண் பாடல்
1

சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர் பாகத்தன்,
வெங் குலாம் மதவேழம் வெகுண்டவன்,
கொங்கு உலாம் பொழில் கோடிகாவா! என,
எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே.

2

வாடி வாழ்வது என் ஆவது? மாதர்பால்
ஓடி, வாழ்வினை உள்கி, நீர், நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல், கூறினேன்:
பாடிகாவலில் பட்டுக் கழிதிரே.

3

முல்லை நல்முறுவல்(ல்) உமை பங்கனார்,
தில்லை அம்பலத்தில்(ல்) உறை செல்வனார்,
கொல்லை ஏற்றினர், கோடிகாவா! என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

4

நா வளம் பெறும் ஆறு, மன் நன்னுதல்
ஆமளம் சொலி, அன்பு செயின்(ன்) அலால்,
கோமளஞ்சடைக் கோடிகாவா! என,
ஏவள்? என்று எனை ஏசும், அவ் ஏழையே.

5

வீறுதான் பெறுவார் சிலர் ஆகிலும்,
நாறு பூங்கொன்றைதான் மிக நல்கானேல்,
கூறுவேன், கோடிகா உளாய்? என்று; மால்
ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

6

நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள் எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள் செய்த அப்பன் ஊர்,
குரங்கு சேர் பொழில் கோடிகாவா! என
இரங்குவேன், மனத்து ஏதங்கள் தீரவே.