பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்,
“அடியான்; ஆவா!” எனாது ஒழிதல் தகவு ஆமே?
முடிமேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே .

2

எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்,
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி,
இங்கே என் வினையை அறுத்திட்டு, எனை ஆளும்
கங்கா நாயகனே! கழிப்பாலை மேயானே! .

3

ஒறுத்தாய், நின் அருளில்; அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய், எத்தனையும் நாயேனைப் பொருள் படுத்துச்
செறுத்தாய்; வேலைவிடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .

4

சுரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி, தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்;
விரும்பேன், உன்னை அல்லால், ஒரு தெய்வம் என் மனத்தால்;
கரும்பு ஆரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

5

ஒழிப்பாய், என் வினையை; உகப்பாய்; முனிந்து அருளித்
தெழிப்பாய்; மோதுவிப்பாய்; விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்கச் சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே! .

6

ஆர்த்தாய், ஆடுஅரவை அரை ஆர் புலி அதள்மேல்;
போர்த்தாய், ஆனையின் தோல் உரிவை புலால் நாற;
காத்தாய், தொண்டு செய்வார் வினைகள் அவை போக,
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே .

7

பருத் தாள் வன் பகட்டைப் படம் ஆக முன் பற்றி, அதள்-
உரித்தாய், ஆனையின் தோல்; உலகம் தொழும் உத்தமனே!
எரித்தாய், முப்புரமும்; இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா! தண்கழனிக் கழிப்பாலை மேயானே! .

8

படைத்தாய், ஞாலம் எலாம்; படர்புன்சடை எம் பரமா!
உடைத்தாய், வேள்விதனை; உமையாளை ஓர்கூறு உடையாய்;
அடர்த்தாய், வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய;
கடல் சாரும் கழனிக் கழிப்பாலை மேயானே! .

9

பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்,
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்,
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான், கழிப்பாலை அதே .

10

பழி சேர் இல் புகழான், பரமன், பரமேட்டி,
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை,
தொழுவான் நாவலர்கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர் உலகு ஆள்பவரே .