பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப் பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர், மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்; ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர், துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று, அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல், பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர், வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ- அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர, பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில், பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர், வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.