பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருப்பூவணம்
வ.எண் பாடல்
1

திரு உடையார், திருமால் அயனாலும்
உரு உடையார், உமையாளை ஒர்பாகம்
பரிவு உடையார், அடைவார் வினை தீர்க்கும்
புரிவு உடையார், உறை பூவணம் ஈதோ! .

2

எண்ணி இருந்தும், கிடந்தும், நடந்தும்,
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்;
பண் இசை ஆர் மொழியார் பலர் பாடப்
புண்ணியனார்; உறை பூவணம் ஈதோ! .

3

தெள்ளிய பேய்பல தம் அவற்றொடு
நள் இருள் நட்டம் அது ஆடல் நவின்றோர்,
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும்
புள்ளுவனார், உறை பூவணம் ஈதோ! .

4

நிலன் உடை மான்மறி கையது; தெய்வக்
கனல் உடை மா மழு ஏந்தி, ஓர் கையில்
அனல் உடையார்; அழகு ஆர்தரு சென்னிப்
புனல் உடையார்; உறை பூவணம் ஈதோ! .

5

நடை உடை நல் எருது ஏறுவர்; நல்லார்
கடை கடைதோறு, “இடுமின், பலி!” என்பார்;
துடி இடை நல் மடவாளொடு மார்பில்
பொடி அணிவார்; உறை பூவணம் ஈதோ! .

6

மின் அனையாள் திருமேனி விளங்க ஒர்
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன்,
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய
பொன் அனையான், உறை பூவணம் ஈதோ! .

7

மிக்கு இறை ஏயவன் துன் மதியாய் விட,
நக்கு இறையே விரலால் இற ஊன்றி;
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான்; உறை பூவணம் ஈதோ! .

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம்
ஆர இருப்பு இடமா உறைவான் தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே .