பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / அருளல்
வ.எண் பாடல்
1

எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு
வட்டத் திரை அனல் மாநிலம் ஆகாயம்
ஒட்டி உயிர் நிலை என்னும் இக் காயப்பை
கட்டி அவிழ்ப்பான் கண் நுதல் காணுமே.

2

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத்
தச்சும் அவனே சமைக்க வல்லானே.

3

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன்
குசவனைப் போல் எங்கள் கோன் நந்தி வேண்டில்
அசைவு இல் உலகம் அது இது ஆமே.

4

விடை உடையான் விகிர்தன் மிகு பூதப்
படை உடையான் பரிசே உலகு ஆக்கும்
கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும்
சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே.

5

உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும்
உகந்து நின்றே படைத்தான் பல ஊழி
உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம்
உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே.

6

படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும்
படைத்து உடையான் பல தேவரை முன்னே
படைத்து உடையான் பல சீவரை முன்னே
படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே.

7

ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம்
ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி
ஆதி படைத்தனன் எண் இலி தேவரை
ஆதி படைத்தவை தாங்கி நின்றானே.

8

அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுஉறு நம்பனும் ஆமே.

9

உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல்
விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள்
மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன்
கண் நின்ற மா மணி மா போதம் ஆமே.

10

ஆரும் அறியாத அண்டத் திரு உருப்
பார் முதலாகப் பயிலும் கடத்திலே
நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமல் காணும் சுகம் அறிந்தேனே.