பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் /பெருந்தேவபாணி
வ.எண் பாடல்
1

சூல பாணியை; சுடர்தரு வடிவனை;
நீல கண்டனை; நெற்றியோர் கண்ணனை;
பால்வெண் ணீற்றனை; பரம யோகியை;
காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை;
5 நூலணி மார்பனை; நுண்ணிய கேள்வியை;
கோல மேனியை; கொக்கரைப் பாடலை;
வேலுடைக் கையனை; விண்தோய் முடியனை;
ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை;
தேவ தேவனை; திருமறு மார்பனை;

10 கால மாகிய கடிகமழ் தாரனை;
வேத கீதனை; வெண்தலை ஏந்தியை;
பாவ நாசனை; பரமேச் சுவரனை;
கீதம் பாடியை; கிளர்பொறி அரவனை;
போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை;
15 ஆதி மூர்த்தியை; அமரர்கள் தலைவனை;
சாதி வானவர் தம்பெரு மான்தனை;
வேத விச்சையை; விடையுடை அண்ணலை;
ஓத வண்ணனை; உலகத் தொருவனை;
நாத னாகிய நன்னெறிப் பொருளினை;

20 மாலை தானெரி மயானத் தாடியை;
வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை;
வேத வேள்வியை; விண்ணவர் தலைவனை;
ஆதி மூர்த்தியை; அருந்தவ முதல்வனை;
ஆயிர நூற்றுக் கறி வரியானை;

25 பேயுருவு தந்த பிறையணி சடையனை;
மாசறு சோதியை; மலைமகள் கொழுநனை;
கூரிய மழுவனை; கொலற்கருங் காலனைச்
சீரிய அடியாற் செற்றருள் சிவனை;
பூதிப் பையனை; புண்ணிய மூர்த்தியை;
30 பீடுடை யாற்றை பிராணி தலைவனை;
நீடிய நிமலனை; நிறைமறைப் பொருளினை;
ஈசனை; இறைவனை; ஈறில் பெருமையை;
நேசனை; நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை;
தாதணி மலரனை; தருமனை; பிரமனை;

35 காதணி குழையனை; களிற்றின் உரியனை;
சூழ்சடைப் புனலனை; சுந்தர விடங்கனை;
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை;
வித்தக விதியனை;
தீதமர் செய்கைத் திரிபரம் எரித்தனை;
40 பிரமன் பெருந்தலை நிறைவ தாகக்
கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை;
நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும்
உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை;
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த

45 ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை;
ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை
வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை;
திக்கமர் தேவருடன் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை;
50 வேதமும் நீயே; வேள்வியும் நீயே;
நீதியும் நீயே; நிமலன் நீயே;
புண்ணியம் நீயே; புனிதன் நீயே;
பண்ணியன் நீயே; பழம்பொருள் நீயே;
ஊழியும் நீயே; உலகமும் நீயே;

55 வாழியும் நீயே; வரதனும் நீயே;
தேவரும் நீயே; தீர்த்தமும் நீயே;
மூவரும் நீயே; முன்னெறி நீயே;
மால்வரை நீயே; மறிகடல் நீயே;
இன்பமும் நீயே; துன்பமும் நீயே;

60 தாயும் நீயே; தந்தையும் நீயே;
விண்முதற்பூதம் ஐந்தவை நீயே;
புத்தியும் நீயே; முத்தியும் நீயே;
சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே;
கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து)

65 அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே.
விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து)
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
ஆற்றவும் செய்யும் அருள்.