பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சூல பாணியை; சுடர்தரு வடிவனை; நீல கண்டனை; நெற்றியோர் கண்ணனை; பால்வெண் ணீற்றனை; பரம யோகியை; காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை; 5 நூலணி மார்பனை; நுண்ணிய கேள்வியை; கோல மேனியை; கொக்கரைப் பாடலை; வேலுடைக் கையனை; விண்தோய் முடியனை; ஞாலத் தீயினை நாத்தனைக் காய்ந்தனை; தேவ தேவனை; திருமறு மார்பனை; 10 கால மாகிய கடிகமழ் தாரனை; வேத கீதனை; வெண்தலை ஏந்தியை; பாவ நாசனை; பரமேச் சுவரனை; கீதம் பாடியை; கிளர்பொறி அரவனை; போதணி கொன்றைஎம் புண்ணிய ஒருவனை; 15 ஆதி மூர்த்தியை; அமரர்கள் தலைவனை; சாதி வானவர் தம்பெரு மான்தனை; வேத விச்சையை; விடையுடை அண்ணலை; ஓத வண்ணனை; உலகத் தொருவனை; நாத னாகிய நன்னெறிப் பொருளினை; 20 மாலை தானெரி மயானத் தாடியை; வேலை நஞ்சினை மிகவமு தாக்கியை; வேத வேள்வியை; விண்ணவர் தலைவனை; ஆதி மூர்த்தியை; அருந்தவ முதல்வனை; ஆயிர நூற்றுக் கறி வரியானை; 25 பேயுருவு தந்த பிறையணி சடையனை; மாசறு சோதியை; மலைமகள் கொழுநனை; கூரிய மழுவனை; கொலற்கருங் காலனைச் சீரிய அடியாற் செற்றருள் சிவனை; பூதிப் பையனை; புண்ணிய மூர்த்தியை; 30 பீடுடை யாற்றை பிராணி தலைவனை; நீடிய நிமலனை; நிறைமறைப் பொருளினை; ஈசனை; இறைவனை; ஈறில் பெருமையை; நேசனை; நினைப்பவர் நெஞ்சத் துள்ளனை; தாதணி மலரனை; தருமனை; பிரமனை; 35 காதணி குழையனை; களிற்றின் உரியனை; சூழ்சடைப் புனலனை; சுந்தர விடங்கனை; தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை; வித்தக விதியனை; தீதமர் செய்கைத் திரிபரம் எரித்தனை; 40 பிரமன் பெருந்தலை நிறைவ தாகக் கருமன் செந்நீர் கபாலம் நிறைத்தனை; நிறைத்த கபாலச் செந்நீர் நின்றும் உறைத்த உருவார் ஐயனைத் தோற்றினை; தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த 45 ஆவமுண் நஞ்சம் அமுத மாக்கினை; ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை; திக்கமர் தேவருடன் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை; 50 வேதமும் நீயே; வேள்வியும் நீயே; நீதியும் நீயே; நிமலன் நீயே; புண்ணியம் நீயே; புனிதன் நீயே; பண்ணியன் நீயே; பழம்பொருள் நீயே; ஊழியும் நீயே; உலகமும் நீயே; 55 வாழியும் நீயே; வரதனும் நீயே; தேவரும் நீயே; தீர்த்தமும் நீயே; மூவரும் நீயே; முன்னெறி நீயே; மால்வரை நீயே; மறிகடல் நீயே; இன்பமும் நீயே; துன்பமும் நீயே; 60 தாயும் நீயே; தந்தையும் நீயே; விண்முதற்பூதம் ஐந்தவை நீயே; புத்தியும் நீயே; முத்தியும் நீயே; சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே; கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து) 65 அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே. விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து) இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே ஆற்றவும் செய்யும் அருள்.