பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / போற்றித் திருக்கலிவெண்பா
வ.எண் பாடல்
1

திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த

2

குறுத்தாள், நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து, நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து

3

பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள்
நின்றவா நின்ற நிலைபோற்றி! - அன்றியும்

4

புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்

5

காணான் இழியக் கனக முடிகவித்துக்
கோணாது நின்ற குறிபோற்றி! - நாணாளும்

6

பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண

7

வரத்திற் பெரிய வலிதொலைய்க் காலன்
உரத்தில் உதைத்தவுதை போற்றி! - கரத்தான்மே

8

வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய

9

வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த கண்போற்றி! - தூமப்

10

படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தான் மிக்குச் - சடலம்

11

முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தவடர் போற்றி! - நடுங்கத்

12

திருமால் முதலாய தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற

13

நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி! - சாலமண்டிப்

14

போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்

15

கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு போற்றி! - தடுத்து

16

வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம்
நிறையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த

17

பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய
மெத்தெனவே வைத்த விரல்போற்றி! - அத்தகைத்த

18

வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்(கு)

19

ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த விறல்போற்றி! - மட்டித்து

20

வாலுகத்தால் மாவிலிங்க மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்(கு)

21

ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்

22

பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த நலம்போற்றி! - நிற்க,

23

வலந்தருமால், நான்முகனும் வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்

24

சக்கரத்தால் ஈர்ந்(து)அரிதன் தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஃதன் றீந்த விறல்போற்றி! - அக்கணமே

25

நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய, - மிக்கிருந்த

26

அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களிந்த
செங்கைத் திறத்த திறல்போற்றி! - திங்களைத்

27

தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்

28

பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு
வரமன் றளித்தவலி போற்றி! - புரமெரித்த

29

அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று

30

நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா போற்றி! - விடைகாவல்

31

தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட மயிலூரும் -கோனவனைச்

32

சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த வரம்போற்றி! - மேனாள்

33

அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்(கு)

34

அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள் போற்றி! - கவைமுகத்த

35

பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால

36

மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி

37

அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி! - தொடுத்தமைத்த

38

நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை

39

விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி! ஒட்டி

40

விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா நின்று - வசையினால்,

41

பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - நேசத்தால்

42

43

கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி! - மண்ணின்மேல்

44

காளத்தி போற்றி! கயிலைமலை போற்றி!யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ(டு)

45

எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.