பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் - பருத்த
குறுத்தாள், நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து, நிலம்ஏழ் - உறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி! - அன்றியும்
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் - பண்டொருநாள்
காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி! - நாணாளும்
பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண
வரத்திற் பெரிய வலிதொலைய்க் காலன் உரத்தில் உதைத்தவுதை போற்றி! - கரத்தான்மே
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி! - தூமப்
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் - சடலம்
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தவடர் போற்றி! - நடுங்கத்
திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி! - சாலமண்டிப்
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம்
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி! - தடுத்து
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிறையெடுத்து நெக்குடலம் இற்றுப் - புரையெடுத்த
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி! - அத்தகைத்த
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஓடி விதிர்விதிர்த்துத் - தானவருக்(கு)
ஒட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி! - மட்டித்து
வாலுகத்தால் மாவிலிங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுதைத்தங்(கு)
ஒட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கண்
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி! - நிற்க,
வலந்தருமால், நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால் கொள்ள அடர்க்கும் - சலந்தரனைச்
சக்கரத்தால் ஈர்ந்(து)அரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஃதன் றீந்த விறல்போற்றி! - அக்கணமே
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய, - மிக்கிருந்த
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களிந்த செங்கைத் திறத்த திறல்போற்றி! - திங்களைத்
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் - பாய்த்திப்
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு வரமன் றளித்தவலி போற்றி! - புரமெரித்த
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து - நன்று
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி! - விடைகாவல்
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் -கோனவனைச்
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி! - மேனாள்
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் - துதித்தங்(கு)
அவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி! - கவைமுகத்த
பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டு மெற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண் வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி! - தொடுத்தமைத்த
நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ் வாள்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி! ஒட்டி
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசைய உடல்திரியா நின்று - வசையினால்,
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - நேசத்தால்
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி! - மண்ணின்மேல்
காளத்தி போற்றி! கயிலைமலை போற்றி!யென நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ(டு)
எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.