பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / திருமுருகாற்றுப்படை
வ.எண் பாடல்
1

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்(கு)
ஓவற இமைக்குஞ் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்
5. செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்(து)

10. இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்(து)
உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன்,
மால்வரை நிவந்த சேண்உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
கணைக்கால், வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்

15. கோபத் தன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கைபுனைந்(து) இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித்

20. துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச்
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு
பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்
தெய்வ உத்தியொடு வலம்புரிவயின் வைத்துத்
திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்

25. மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகள்அறு முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்(டு)
உளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்
கிளைக்கவின்(று) எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்(பு)
30. இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ்
நறுங்குற(டு) உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்

35. குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்தா(து) அப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி
‘வாழிய பெரி(து’ என்(று) ஏத்திப் பலருடன்

40. சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்
சூர்அ மகளிர் ஆடும் சோலை
மந்தியும் அறியா மரன்பியல் அடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்,

45. பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்,
உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்
கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்

50. பெருமுலை அலைக்கும் காதின், பிணர்மோட்(டு)
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்
கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர

55. வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணம்தின் வாயள் துணங்கை தூங்க
இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை
அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல்வலம் அடங்கக், கவிழ்இணர்

60. மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்(து)
எய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்(து) உறையும்
செவ்வுநீ நயந்தனை ஆயின் பலவுடன்
65. நன்னர் நெஞ்சத்(து) இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே;

திருப்பரங்குன்றம்

செருப்புகன்(று) எடுத்த சேண்உயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயில்
70. திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து
மாடம்மலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்(று) அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்

75. கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்(று)அமர்ந்(து) உறைதலும் உரியன்;
அதாஅன்று,

திருச்சீரலைவாய்

வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
80. வாடா மாலை ஒடையொடு துயல்வரப்,
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம்மேல் கொண்(டு)
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய

85. முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாள்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்

90. தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனன்நேர்(பு) எழுதரு வாள்நிற முகனே
1மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;2 ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
95. காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;3 ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே;4 ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;5 ஒருமுகம்,

100. செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;6 ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே; ஆங்குஅம்
மூவிரு முகனும் முறைநவின்(று) ஒழுகலின்

105. ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்
செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
1விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை;
2உக்கம் சேர்த்தியது ஒருகை;

110. 3நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
அசைஇய(து) ஒருகை;
4அங்குசம் கடாவ ஒருகை5,6 இருகை
ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப;
7ஒருகை மார்பொடு விளங்க;

115. 8ஒருகை தாரொடு பொலிய;9 ஒருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப;
10ஒருகை பாடின் படுமணி இரட்ட;
11ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய;
12ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட

120. ஆங்(கு)அப்
பன்னிரு கையும் பாற்பட இயற்றி
அந்தப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந்(து) இசைப்ப வால்வளைஞரல
உரம்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு

125. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ
விசும்(பு)ஆறாக விரைசெலல் முன்னி
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே,
அதாஅன்று,
திருஆவினன்குடி

130. சீரை தைஇய உடுக்கையர், சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்,
மாசற விளங்கும் உருவினர், மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்பெழுந்து இயங்கும் யாக்கையர், நன்பகல்

135. பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும்
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை

140. யாவதும் அறியா இயல்பினர், மேவரத்
துனியில் காட்சி முனிவர் முன்புகப்
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்
செவிநேர்பு வைத்துச்செய்வுறு திவவின்

145. நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவலர் இன்னரம்(பு) உளர,
நோயின் றியன்ற யாக்கையர், மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலையர், இன்னகைப்

150. பருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்
மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்,
கடுவொ(டு) ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்(று)
அழலென உயிர்க்கும், அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொழுஞ்சிறைப்

155. புள்ளணி நீள்கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்
உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
160. வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்(து)
ஈரிரண்(டு) ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த, யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய

165. உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவரும் தலைவர்ஆக
ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப்

170. பகலில் தோன்றும் இகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ(டு)
ஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளர்த் தன்ன செலவினர், வளியிடைத்

175. தீயெழுந் தன்ன திறலினர், தீப்பட
உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய
உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்
அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு, சின்னாள்

180. ஆவி னன்குடி அசைதலும் உரியன்;
அதாஅன்று,

திருஏரகம்

இருமூன்(று) எய்திய இயல்பினின் வழாஅ(து)
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான் கிரட்டி இளமை நல்லியாண்(டு)
185. ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்(து)
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,

190. உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்(து)
ஆறெழுத்(து) அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்(து)
ஏரகத் துறைதலும் உரியன்; அதாஅன்று,
குன்றுதோறாடல்

195. பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்,
200. நீடமை விளைந்த தேக்கள் தேறல்
குன்றகத் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர,
விரல்உளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி

205. இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலையுடை நறும்பூச்
செங்கால் மராஅத்த வால்இணர் இடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ

210. மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்,
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன்,
குழலன், கோட்டன், குறும்பல் இயத்தன்

215. தகரன், மஞ்ஞையன், புகரில் சேவல்அம்
கொடியன், நெடியன், தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்

220. முழுவுறழ் தடக்கையின் இயல ஏந்தி
மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதோ றாடலும் தின்றதன் பண்பே:
அதாஅன்று,
சிறுதினை மலரொடு விரைஇ, மறிஅறுத்து,
225. வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்,
வேலன் தைஇய வெறிஅயர் களனும்,
காடும், காவும், கவின்பெறு துருத்தியும்,

230. யாறுங், குளனும், வேறுபல் வைப்பும்,
சதுக்கமும், சந்தியும், புதுப்பூங் கடம்பும்,
மன்றமும், பொதியிலுங், கந்துடை நிலையினும்
மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர,
நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்

235. குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச்
செந்நூல் யாத்து, வெண்பொரி சிதறி,
மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்
குருதியொ(டு) விரைஇய தூவெள் அரிசி

240. சில்பலிச் செய்து, பல்பிரப்பு இரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை
துணையற அறுத்துத் தூங்க நாற்றி,
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி,

245. நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி,
இமிழிசை அருவியொ(டு) இன்னியம் கறங்க,
உருவப் பல்பூத் தூஉய், வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக், குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க

250. முருகாற்றுப் படுத்த உருகெழு வியல்நகர்
ஆடுகளம் சிலம்பப் பாடிப், பலவுடன்
கோடுவாய் வைத்துக், கொடுமணி இயக்கி,
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி,
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட

255. ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே,
ஆண்டாண் டாயினும் ஆக, காண்தக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்,
கைதொழூஉப் பரவிக், காலுற வணங்கி,
நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை
260. ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப,
அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!

265. இழையணி சிறப்பிற் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!,
மாலை மார்ப! நூலறி புலவ!
செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள!
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை!

270. மங்கையர் கணவ! மைந்தர் ஏறே!
வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ!
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து,
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ!
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே!

275. அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக!
நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள!
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றா(டு) அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்!

280. பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி!
போர்மிகு பொருந! குரிசில்! எனப்பல
யான்அறி அளவையின் ஏத்தி, ஆனாது
நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்

285. நின்னடி உள்ளி வந்தனன், நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!எனக்
குறித்தது மொழியா அளவையில், குறித்துடன்
வேறுபல் உருவில் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி,

290. அளியன் தானே; முதுவாய் இரவலன்
வந்தோன், பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவும், நல்லவும் நனிபல ஏத்தித்,
தெய்வம் சான்ற திறல்விளங்(கு) உருவின்
வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி,
295. அணங்குசால் உயர்நிலை தழீஇப், பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்(து) இளநலம் காட்டி,
அஞ்சல் ஓம்புமதி, அறிவல்நின் வர(வு)என
அன்புடை நன்மொழி அளைஇ, விளிவுஇன்(று)
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்(து)

300. ஒருநீ யாகித் தோன்ற, விழுமிய
பெறலரும் பரிசில் நல்கும்மதி, பலவுடன்
வேறுபல் துகிலின் நுடங்கி, அகில்சுமந்(து)
ஆரம் முழுமுதல் உருட்டி, வேரல்
பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு

305. விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த
தண்கமழ் அலர்இறால் சிதைய,நன்பல
ஆசினி முதுசுளை கலாவ, மீமிசை
நாக நறுமலர் உதிர, ஊகமொடு
மாமுக முகக்கலை பனிப்பப், பூநுதல்

310. இரும்பிடி குளிர்ப்ப வீசிப், பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப், பொன்கொழியா,
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்

315. கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை இரியக் கேழலொ(டு)
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்

320. பெருங்கல் விடர்அளைச் செறியக், கருங்கோட்(டு)
ஆமா நல்ஏறு சிலைப்பச், சேண்நின்(று)
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

2

குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர்தடிந்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
உளையாய்என் உள்ளத் துறை
1

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்.
2

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.
3

இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
4

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
5

அஞ்சு முகும்தோன்றில் ஆறு முகம்தோன்றும்
வெஞ்ச மரில்அஞ்சல்என் வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகாஎன் றோதுவார் முன்.
6

முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.
7

காக்கக் கடவியநீ காவா திருத்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.
8

பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல்.
9

நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தான்நினைத்த எல்லாம் தரும்.
10