பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்,
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்,
குருதி புலராச் சுரிகை எஃகம்
அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன்,
5 தோல்நெடும்பையில் குறுமயிர் திணித்து
வாரில் வீக்கிய வரிகைக் கட்டியன்,
உழுவைக் கூருகிர்க் கேழல்வெண் மருப்பு
மாறுபடத் தொடுத்த மாலையுத் தரியன்,
நீலப்பீலி நெற்றி சூழ்ந்த
10 கானக் குஞ்சிக் கவடி புல்லினன்,
முடுகு நாறு குடிலை யாக்கையன்,
வேங்கை வென்று வாகை சூடிய
சங்கரன் றன்இனத் தலைவன் ஓங்கிய
வில்லும்,அம்பும் நல்லன ஏந்தி
15 ஏற்றுக்கல்வனம் காற்றில்இயங்கி,
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்து,
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி,
நாவில் வைத்த நாட்போ னகமும்
தன்தலைச் செருகியதண்பளித் தாமமும்
20 வாய்க்கலசத்து மஞ்சன நீரும்
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்,
முடியிற் பூசை அடியால் நீக்கி,
நீங்காக் குணத்துக்
கோசரிக்(கு)அன்றவன் நேசங் காட்ட
25 முக்கண்அப்பனுக்(கு) ஒருகணில் உதிரம
தக்கி ணத்திடை இழிதர, அக்கணம்
அழுது, விழுந்து, தொழு(து)எழுந் தரற்றிப்
புன்மருந் தாற்றப் போகாதென்று
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப
30 ஒழிந்தது; மற்றை ஒண்திரு நயனம்
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க,
அற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையால் அகழ ஆண்டகை
ஒருகை யாலும் இருகைபிடித்து
35 ஒல்லைநம்புண் ஒழிந்தது, பாராய்;
நல்லை ! நல்லை ! எனப்பெறும்
திருவேட் டுவர்தந் திருவடி கைதொழக்
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.