வ.எண் |
பாடல் |
1 |
திருந்திய செந்தா மரைத் தடத்துச் சென்(று) ஓர்
இருந் தண் இளமேதி பாயப், - பொருந்திய
|
2 |
புள் இரியப், பொங்கு கயல்வெருவப், பூங்குவளைக்
கள் இரியச், செங்கழுநீர் கால்சிதையத், - துள்ளிக்
|
3 |
குருகிரியக், கூன்இறவம் பாயக், கெளிறு
முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க. -வெருவுற்றுக்
|
4 |
கோட்டகத்துப் பாய்வாளை கண்டலவன் கூசிப் போய்த்
தோட்டகத்த செந்நெல் துறைஅடையச், -சேட்டகத்த
|
5 |
காவி முகம்மலரக், கார்நீலம் கண்படுப்ப,
ஆவிக்கண் நெய்தல் அலமர, -மேவிய
|
6 |
அன்னம்துயில்இழப்ப, அம்சிறைசேர் வண்டினங்கள்
துன்னும் துணைஇழப்பச் சூழ் கிடங்கின் -மன்னிய
|
7 |
வள்ளை நகைகாட்ட, வண்குமுதம் வாய்காட்ட,
தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட, - மெள்ள
|
8 |
நிலவுமலரணையினின்றிழிந்த சங்கம்
இலகுகதிர்நித்திலங்கள் ஈன, - உலவிய
|
9 |
மல்லைப்பழனத்து வார்பிரசம் மீதழிய
ஒல்லைவரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய
|
10 |
பாசடை, அச்செந்நெற் படர் ஒளியால் பல்கதிரோன்
தேசடைய ஓங்கும் செறுவுகளும், -மாசில்நீர்
|
11 |
நித்திலத்திற் சாயும் நிகழ்மரக தத் தோலும்
தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய -மொய்த்த
|
12 |
பவளத்தின்செவ்வியும் பாங்கனைய ஓங்கித்
திவளக் கொடிமருங்கிற் சேர்ந்துதித் -துவளாமைப்
|
13 |
பட்டாடைகொண்டுடுத்துப் பைந்தோ(டு) இலங்குகுழை
இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும், -விட்டொளிசேர்
|
14 |
கண்கள்அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத்
தண்டலையின்நீழல் தறிஅணைந்து - கொண்ட
|
15 |
கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்து
மலையும் மரவடிவம் கொண்டாங்(கு) - இலை நெருங்கு
|
16 |
சூதத்திரளும், தொகுகனிக ளான்நிவந்த
மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும், - போதுற்(று)
|
17 |
இனம் ஒருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பும்
கனி நெருங்கு திண்கதலிக் காடும், -நனிவிளங்கு
|
18 |
நாற்றத்தால்எண்டிசையும் வந்து நலம் சிறப்ப
ஊற்றுமடுத்த உயர்பலவும், - மாற்றமரு
|
19 |
மஞ்சள்எழில்வனமும், மாதுளையின் வார்பொழிலும்,
இஞ்சி இளங்காவின் ஈட்டமும், - எஞ்சாத
|
20 |
கூந்தற் கமுகும், குளிர்பாட லத்(து) எழிலும்
வாய்ந்தசீர்ச் சண்பகத்தின் வண்காடும், - ஏந்தெழில்ஆர்
|
21 |
மாதவியும், புன்னையும் மன்னும் மலர்க்குரவும்,
கேதையும் எங்கும் கெழீஇப் - போதின்
|
22 |
இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம்
வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந் தெங்கும்
|
23 |
ஆலை ஒலியும், அரிவார் குரல்ஒலியும்,
சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும், - ஆலும்
|
24 |
அறுபதங்கள் ஆர்ப்பொலியும், ஆன்றுபொலி வெய்தி
உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும்
|
25 |
நந்தா வனத்தியல்பும், நற்றவத் தோர் சார்விடமும்
அந்தமில் சீரார் அழகினால் - முந்திப்
|
26 |
புகழ்வாரும் தன்மையவாப் பூதலத்துள் ஓங்கி
நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப, நேரே - திகழ
|
27 |
முளைநிரைத்து, மூரிச் சிறைவகுத்து, மொய்த்த
புளகத்தின் பாம்புரிசூழ் போகி, - வளர
|
28 |
இரும்பதணம் சேர இருத்தி, எழில் நாஞ்சில்
மருங்கணையஅட்டாலை யிட்டுப், - பொருந்திய
|
29 |
தோமரமும், தொல்லைப் பொறிவீ சியந்திரமும்
காமரமும், ஏப்புழையும் கைகலந்து - மீ மருவும்
|
30 |
வெங்கதிரோன் தேர்விலங்கு மிக் குயர்ந்த மேருப் போன்னு
அங்கனகத்(து)இஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர்
|
31 |
மாளிகையும், மன்னியசீர் மண்டபமும், ஒண்தலத்த
சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய
|
32 |
நாடக சாலையும், நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும், - கேடில்
|
33 |
உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு
தெருவு வகுத்தசெய் குன்றும் - மருவினிய
|
34 |
சித்திரக் காவும், செழும் பொழிலும், வாவிகளும்
நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும், - எத்திசையும்
|
35 |
துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை
மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும்
|
36 |
மரகதமும்,நித்திலமும், மாமணியும் பேணி
இரவலருக்(கு) எப்போதும் ஈந்து, - கரவாது
|
37 |
கற்பகமும், காருமெனக் கற்றவர்க்கும், நற்றவர்க்கும்
தப்பாக் கொடைவளர்க்கும் சாயாத - செப்பத்தால்
|
38 |
பொய்ம்மை கடிந்து, புகழ்புரிந்து, பூதலத்து
மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும், - உண்மை
|
39 |
மறைபயில்வார், மன்னு வியாகரணக் கேள்வித்
துறைபயில்வார், தொன்னூல் பயில்வார், - முறைமையினால்
|
40 |
ஆகமங்கள் கேட்பார், அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார், - சோகமின்றி
|
41 |
நீதி நிலையுணர்வார், நீள்நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார், - ஆதி
|
42 |
அருங்கலைநூல் ஓதுவார், ஆதரித்து வென்றிக்
கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார்; - ஒருங்கிருந்து
|
43 |
காமநூல் கேட்பார், கலைஞானங் காதலிப்பார்,
ஓமநூல் ஓதுவார்க்(கு) உத்தரிப்பார், - பூமன்னும்
|
44 |
நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர்
தாம்மன்னி வாழும் தகைமைத்தாய், - நாமன்னும்
|
45 |
ஆரணங்கும், மற்றை அருந்ததியும் போல்மடவார்
ஏரணங்கு மாடத் தினிதிருந்து, - சீரணங்கு
|
46 |
வீணை பயிற்றுவார், யாழ்பயில்வார், மேவியசீர்ப்
பாணம் பயில்வார், பயன்உறுவார், - பேணியசீர்ப்
|
47 |
பூவைக்குப், பாட்டுரைப்பார், பொற்கிளிக்குச் சொற்பயில்வார்,
பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவா - ராய் எங்கும்
|
48 |
மங்கையர்கள் கூட்டமும், மன்னு சிறார்குழுவும்
பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் தங்கிய
|
49 |
வேத ஒலியும், விழாஒலியும், மெல்லியலார்
கீத ஒலியும், கிளர்ந்தோங்கும் - மாதரார்
|
50 |
பாவை ஒலியும், பறைஒலியும், பல்சனங்கள்
மேவும் ஒலியும், வியன்நகரங் - காவலர்கள்
|
51 |
பம்பைத் துடிஒலியும், பவ்வப் படைஒலியும்
கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய
|
52 |
கார்முழக்கம், மற்றைக் கடல்முழக்கம் போற்கலந்த
சீர் முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு
|
53 |
செல்வம் நிறைந்தஊர், சீரில் திகழ்ந்தஊர்,
மல்கு மலர்மடந்தை மன்னும் ஊர், - சொல்லினிய
|
54 |
ஞாலத்து மிக்கஊர், நானூற் றுவர்களூர்
வேலொத்த கண்ணார் விளங்கும் ஊர், - ஆலித்து
|
55 |
மன்னிருகால் வேளை வளர்வெள்ளத்(து) உம்பரொடும்
பன்னிருகால் நீரில் மிதந்தஊர், - மன்னும்
|
56 |
பிரமன்ஊர், வேணுபுரம், பேரொலிநீர் சண்பை,
அரன்மன்னு தண்காழி, அம்பொற் - சிரபுரம்
|
57 |
பூந்தராய், கொச்சைவயம், வெங்குருப், பொங்குபுனல்
வாய்ந்தநல் தோணிபுரம், மறையோர் - ஏய்ந்த
|
58 |
புகலி கழுமலம், பூம்புறவம் என்றிப்
பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற
|
59 |
மல்லைச் செழுநகரம் மன்னவும், வல்லமணர
ஒல்லைக் கழுவில் உலக்கவும், - எல்லையிலா
|
60 |
மாதவத்தோர் வாழவும், வையகத்தோர் உய்யவும்,
மேதக்க வானோர் வியக்கவும், - ஆதியாம்
|
61 |
வென்றிக் கலிகெடவும், வேதத் தொலிமிகவும்
ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும், - துன்றிய
|
62 |
பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல்
மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய
|
63 |
சிந்தனையால் சீரார் கவுணியர்க்கோர் சேய்என்ன
வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில் சீர்
|
64 |
ஞானச் சுடர்விளக்கை, நற்றவத்தோர் கற்பகத்தை
மான மறைஅவற்றின் வான்பொருளை - ஆன சீர்த்
|
65 |
தத்துவனை, நித்தனைச் சைவத் தவர்அரசை,
வித்தகத்தால் ஓங்கு விடலையை, - முத்தமிழின்
|
66 |
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத், தெவ்வருயிர்
அஞ்சத் திகழ்ந்த அடலுருமை, - எஞ்சாமை
|
67 |
ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில்
கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத், - தீதறுசீர்க்
|
68 |
காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும்
மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத்
|
69 |
‘திருஞான சம்பந்தன்’ என்றுலகம் சேர்ந்த
ஒருநாமத் தால்உயர்ந்த கோவை, - வருபெரு நீர்ப்
|
70 |
பொன்னிவள நாடனைப், பூம்புகலி நாயகனை
மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை, - முன்னே
|
71 |
நிலவு முருகர்க்கும், நீலநக் கர்க்கும்
தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டர்க்கும் - குலவிய
|
72 |
தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை,
மாழைஒண்கண் மாதர் மதனனைச், - சூழொளிய
|
73 |
கோதைவேல் தென்னன்றன் கூடற் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக், - காதலால்
|
74 |
புண்கெழுவு செம்புனல்ஆ றோடப் பொரு(து) அவரை
வண்கழுவில் வைத்த மறையோனை, - ஒண்கெழுவு
|
75 |
ஞாலத் தினர்அழிய மன்னுநனி பள்ளியது
பாலை தனைநெய்த லாக்கியும், - காலத்து
|
76 |
நீரெதீர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும்
பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்தும், முன் - நேரெழுந்த
|
77 |
யாழை முரித்தும், இருங்கதவம் தான் அடைத்தும்,
சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும், - தாழ்பொழில்சூழ்
|
78 |
கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும்,
துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில்
|
79 |
நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில்
முத்தின் சிவிகை முதல் கொண்டும், - அத்தகுசீர்
|
80 |
மாயிரு ஞாலத்து மன்ஆ வடுதுறைபுக்(கு)
ஆயிரஞ் செம்பொ னதுகொண்டும், - ஆய்வரிய
|
81 |
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு ஓத்தூரில்
ஆண்பனை பெண்பனைக ளாக்கியும், - பாண்பரிசில்
|
82 |
கைப்பணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் - எப்பொழுதும்
|
83 |
நீக்கரிய இன்பத்(து) இராகமிருக் குக்குறள்,
நோக்கரிய பாசுரம், பல் பத்தோடு, - மாக்கரிய
|
84 |
யாழ்மூரி, சக்கரமாற்(று) ஈரடி, முக்காலும்
பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி
|
85 |
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை - விருப்போடு
|
86 |
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர்
எண்ணின் முனிவரர் ஈட்டத்துப் - பண்அமரும்
|
87 |
ஒலக்கத் துள்இருப்ப, ஒண்கோயில் வாயிலின்கண்
கோலக் கடைகுறுகிக் கும்பிட்(டு) ஆங்(கு) - ஆலும்
|
88 |
புகலி வளநகருட் பூசுரர் புக்(கு) ஆங்(கு)
இகல்இல் புகழ்பரவி ஏத்திப் - புகலிசேர்
|
89 |
‘வீதி எழுந்தருள வேண்டும்’ என விண்ணப்பம்
ஆதரத்தால் செய்ய, அவர்க்கருளி, - நீதியால்
|
90 |
கேதகையும், சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த
மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில்
|
91 |
இருவேலி தன்னை இடையிருத்தி, ஈண்டு
மருவோடு மல்லிகையை வைத்(து) ஆங்(கு) - அருகே
|
92 |
கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப்
பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும்
|
93 |
புன்னாகந் தன்னைப் புணர இருவாட்சி
தன் அயலே முல்லை தலை எடுப்ப - மன்னிய
|
94 |
வண் செருந்தி வாய்நெகிழ்ப்ப, மௌவல் அலர் படைப்பத்
தண் குருந்தம் மாடே தலை இறக்க - ஒண்கமலத்
|
95 |
தாதடுத்த கண்ணியால் தண்நறுங் குஞ்சிமேற்
போதடுத்த கோலம் புனைவித்துக் - காதில்
|
96 |
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தில்
இனமணியின் ஆரம் இலகப் - புனை கனகத்
|
97 |
தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம்
வைத்து, மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த
|
98 |
கேயூரம் தோள்மேல் கிடத்திக் கிளர்பொன்னின்
வாய்மை பெறுநூல் வலம்திகழ - ஏயும்
|
99 |
தமனியத்தின் தாழ்வடமும், தண்தரளக் கோப்பும்
சிமய வரை மார்பிற் சேர்த்தி - அமைவுற்ற
|
100 |
வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து, மேவுதொழில்
ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து, திண் நோக்கில்
|
101 |
காற்றுருமோ, குன்றோ, கடலோ, அடல்உருமோ,
கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத்
|
102 |
தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப்
புழைத் தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தால்
|
103 |
பூத்த கடதடத்துப் போகம் மிகப்பொலிந்த
காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த
|
104 |
கொடுநிகளம் போக்கி நிமிர் கொண்டெழுந்து கோபித்(து)
இடுவண்டை இட்டுக் கலித்து - முடுகி
|
105 |
நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர் நீத்(து)
இடிபெயர்த் தாளத்(து) இலுப்பி - அடுசினத்தால்
|
106 |
கன்ற முகம், பருக் கையெடுத்(து) ஆராய்ந்து
வென்றி மருப்புருவ வெய்துயிர்த்(து) - ஒன்றிய
|
107 |
கூடம் அரண்அழித்துக் கோபுரங்க ளைக்குத்தி
நீடு பொழிலை நிகர் அழித்(து) - ஓடிப்
|
108 |
பணப்பா கரைப் பரிந்து குத்திப் பறித்த
நிணப்பாகை நீள்விசும்பில் வீசி - அணைப்பரிய
|
109 |
ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக் காரர்கடாம்
மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி
|
110 |
நயந்து குரல்கொடுத்து நட்பளித்துச் சென்று
வியந்தணுகி வேட்டம் தணித்(து) ஆங்(கு) - உயர்ந்த
|
111 |
உடல்தூய வாசிதனைப் பற்றிமேல் கொண்(டு) ஆங்(கு)
அடற்கூடற் சந்தி அணுகி - அடுத்த
|
112 |
பயிர்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி
அயர்வு கெடஅணைத்(து)அ தட்டி - உயர்தரு
|
113 |
தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்சிறுத்
தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும்
|
114 |
பல்சனமும், மாவும், படையும் புடைகிளர
ஒல்லொலியால் ஓங்கு கடல் கிளர - மல்லற்
|
115 |
பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக்
கருத்தோ(டு) இசைகவிஞர் பாட - விரித்த
|
116 |
குடைபலவும், சாமரையும், தொங்கல்களும் கூடிப்
புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு
|
117 |
வீதி அணுகுதலும், மெல்வளையார் உள்மகிழ்ந்து
காதல் பெருகக் கலந்தெங்கும் - சோதிசேர்
|
118 |
ஆடரங்கின் மேலும், அணிமா ளிகைகளிலும்
சேடரங்கு நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய
|
119 |
பேரிளம்பெண் ஈறாகப் பேதை முதலாக
வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப்
|
120 |
பேணும் சிலம்பும், பிறங்கொளிசேர் ஆரமும்,
பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண் மறுகில்
|
121 |
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல்
ஈண்டு குடையின் எழில்நிழற் கீழ்க் - காண்டலுமே
|
122 |
கைதொழுவார்; நின்று கலைசரிவார்; மால் கொண்டு
மெய்தளர்வார்; வெள்வளைகள் போய் வீழ்வார்; - வெய்துயிர்த்துப்
|
123 |
பூம்பயலை கொள்வார்; புணர்முலைகள் பொன்பயப்பார்;
காம்பனைய மென்தோள் கவின்அழிவார்; - தாம் பயந்து
|
124 |
‘வென்றிவேற் சேய்’ என்ன, ‘வேனில் வேள் கோ’ என்ன
‘அன்(று)’ என்ன, ‘ஆம்’ என்ன ஐயுற்றுச் - சென்றணுகிக்
|
125 |
‘காழிக் குலமதலை’ என்றுதம் கைசோர்ந்து
வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால்
|
126 |
உள்ள நிலைதளர்ந்த ஒண்ணுதலார், வெல்களிற்றை
‘மெள்ள நட’ என்று வேண்டுவார்; - ‘கள்ளலங்கல்
|
127 |
தாராமை யன்றியும், தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன்’ என்பார்; - ‘நேராக
|
128 |
என்னையே நோக்கினான்; ஏந்திழையீர்! இப்பொழுது
நன்மை நமக்குண்(டு) எனநயப்பார்; - கைம்மையால்
|
129 |
ஒண்கலையும், நாணும், உடைத்துகிலும், தோற்றவர்கள்
‘வண்கமலத் தார்வலிந்து கோடும்’ எனப் - பண்பின்
|
130 |
வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல்
தொடுத்(து) அதரத் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக்
|
131 |
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால்
பூசற் கமைந்து புறப்படுவார்; - வாசச்
|
132 |
செழுமலர்த்தார் இன்றெமக்கு நல்காதே, சீரார்
கழுமலத்தார் கோவே! கழல்கள் - தொழுவார்கள்
|
133 |
அங்கோல வளையிழக்கப் போவது நின்னுடைய
செங்கோன்மையே’ என்று செப்புவார்; - நங்கைமீர்!
|
134 |
இன்றிவன் நல்குமே! எண்பெருங் குன்றத்தின்
அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற
|
135 |
உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி
நிரை கழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார்
|
136 |
பெற்றிடலாம் என்றிருந்த நம்மினும் பேதையர்கள்
மற்றுளரோ - என்று வகுத்துரைப்பார்; - மற்றிவனே
|
137 |
பெண்இரக்க, அன்றே, பிறைநுதலீர்! மாசுணத்தின்
நண்ணு கடுவிடத்தால் நாள்சென்று - விண்ணுற்ற
|
138 |
ஆருயிரை மீட்(டு), அன்(று) அவளை அணிமருகல்
ஊரறிய வைத்த(து) என உரைப்பார்; பேரிடரால்
|
139 |
ஏசுவார்; தாம் உற்ற ஏசறவைத் தோழியர் முன்
பேசுவார்; நின்று தம் பீடழிவார்; - ஆசையால்
|
140 |
நைவார்; நலன்அழிவார்; நாணோடு பூண் இழப்பார்;
மெய்வாடு வார்; வெகுள்வார்; வெய்துயிர்ப்பார்; தையலார்
|
141 |
பூந்துகிலைப், ‘பூமாலை’ என்றணிவார்; பூவினைமுன்
‘சாந்தம்’ என மெய்யில் தைவருவார்; - வாய்ந்த
|
142 |
‘கிளி’ என்று பாவைக்குச் சொற்பயில்வார்; பந்தை
‘ஒளிமே கலை’ என்(று) உடுப்பார்; - அளிமேவு
|
143 |
பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான்
ஒங்கொலிசேர் வீதி உலா.
|