பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

அன்னைப் பத்து
வ.எண் பாடல்
1

வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர்,
நாதப் பறையினர்; அன்னே! என்னும்,
நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும்,
நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.

2

கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.

3

நித்த மணாளர், நிரம்ப அழகியர்,
சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும்.
சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை
அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.

4

ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர்
வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம்
வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.

5

நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர்,
பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும்.
பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை
ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.

6

உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர்
மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும்.
மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்;
என்ன அதிசயம்! அன்னே! என்னும்.

7

வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர்
பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும்.
பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என்
உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.

8

தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர்,
ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும்.
ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில்,
தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.

9

தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர்,
ஐயம் புகுவரால்; அன்னே! என்னும்.
ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம்
நையும்; இது என்னே! அன்னே! என்னும்.

10

கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும்,
துன்றிய சென்னியர்; அன்னே! என்னும்.
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே,
இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.