பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வேத மொழியர், வெள் நீற்றர், செம் மேனியர், நாதப் பறையினர்; அன்னே! என்னும், நாதப் பறையினர் நான்முகன், மாலுக்கும், நாதர், இந் நாதனார்; அன்னே! என்னும்.
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர், உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும், உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக் கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.
நித்த மணாளர், நிரம்ப அழகியர், சித்தத்து இருப்பரால்; அன்னே! என்னும். சித்தத்து இருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர், ஆனந்தரால்; அன்னே! என்னும்.
ஆடு அரப் பூண், உடைத் தோல், பொடிப் பூசிற்று ஓர் வேடம் இருந்த ஆறு; அன்னே! என்னும். வேடம் இருந்தவா, கண்டு கண்டு, என் உள்ளம் வாடும்; இது என்னே! அன்னே! என்னும்.
நீண்ட கரத்தர், நெறிதரு குஞ்சியர், பாண்டி நல் நாடரால்; அன்னே! என்னும். பாண்டி நல் நாடர் பரந்து எழு சிந்தையை ஆண்டு அன்பு செய்வரால்; அன்னே! என்னும்.
உன்னற்கு அரிய சீர் உத்தரமங்கையர் மன்னுவது என் நெஞ்சில்; அன்னே! என்னும். மன்னுவது என் நெஞ்சில்; மால், அயன், காண்கிலார்; என்ன அதிசயம்! அன்னே! என்னும்.
வெள்ளைக் கலிங்கத்தர், வெண் திருமுண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர்; அன்னே! என்னும். பள்ளிக் குப்பாயத்தர் பாய் பரி மேற்கொண்டு, என் உள்ளம் கவர்வரால்; அன்னே! என்னும்.
தாளி அறுகினர், சந்தனச் சாந்தினர், ஆள் எம்மை ஆள்வரால்; அன்னே! என்னும். ஆள் எம்மை ஆளும் அடிகளார் தம் கையில், தாளம் இருந்த ஆறு; அன்னே! என்னும்.
தையல் ஓர் பங்கினர், தாபத வேடத்தர், ஐயம் புகுவரால்; அன்னே! என்னும். ஐயம் புகுந்து அவர் போதலும், என் உள்ளம் நையும்; இது என்னே! அன்னே! என்னும்.
கொன்றை, மதியமும், கூவிளம், மத்தமும், துன்றிய சென்னியர்; அன்னே! என்னும். துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே, இன்று, எனக்கு ஆன ஆறு; அன்னே! என்னும்.