பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கோயில் திருப்பதிகம்
வ.எண் பாடல்
1

மாறி நின்று, என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழி அடைத்து; அமுதே
ஊறி நின்று; என் உள் எழு பரஞ்சோதி! உள்ளவா காண வந்தருளாய்:
தேறலின் தெளிவே! சிவபெருமானே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறு இலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே!

2

அன்பினால், அடியேன் ஆவியோடு, ஆக்கை, ஆனந்தமாய்க் கசிந்து உருக,
என் பரம் அல்லா, இன் அருள் தந்தாய்; யான், இதற்கு இலன் ஒர் கைம்மாறு:
முன்பும் ஆய், பின்பும், முழுதும், ஆய், பரந்த முத்தனே! முடிவு இலா முதலே!
தென் பெருந்துறையாய்! சிவபெருமானே! சீர் உடைச் சிவபுரத்து அரசே!

3

அரைசனே! அன்பர்க்கு; அடியனேன் உடைய அப்பனே! ஆவியோடு ஆக்கை
புரை புரை கனியப் புகுந்துநின்று, உருக்கி, பொய் இருள் கடிந்த மெய்ச் சுடரே!
திரை பொரா மன்னும், அமுதத் தெண் கடலே! திருப்பெருந்துறை உறை சிவனே!
உரை, உணர்வு, இறந்துநின்று, உணர்வது ஓர் உணர்வே!
யான், உன்னை உரைக்கும் ஆறு,உணர்த்தே.

4

உணர்ந்த மா முனிவர், உம்பரோடு, ஒழிந்தார் உணர்வுக்கும், தெரிவு அரும் பொருளே!
இணங்கு இலி! எல்லா உயிர்கட்கும் உயிரே! எனைப் பிறப்பு அறுக்கும் எம் மருந்தே!
திணிந்தது ஓர் இருளில், தெளிந்த தூ ஒளியே! திருப்பெருந்துறை உறை சிவனே!
குணங்கள் தாம் இல்லா இன்பமே! உன்னைக் குறுகினேற்கு இனி என்ன குறையே?

5

குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே! ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே!
மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய், வந்து என் மனத்திடை மன்னிய மன்னே!
சிறை பெறா நீர் போல், சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந்துறை உறை சிவனே!
இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்; இனி, உன்னை என் இரக்கேனே?

6

இரந்து இரந்து உருக, என் மனத்துள்ளே எழுகின்ற சோதியே! இமையோர்
சிரம் தனில் பொலியும் கமலச் சேவடியாய்! திருப்பெருந்துறை உறை சிவனே!
நிரந்த ஆகாயம், நீர், நிலம், தீ, கால், ஆய், அவை அல்லை ஆய், ஆங்கே,
கரந்தது ஓர் உருவே! களித்தனன், உன்னைக் கண் உறக் கண்டுகொண்டு, இன்றே.

7

இன்று, எனக்கு அருளி, இருள் கடிந்து, உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்; நீ அலால் பிறிது மற்று இன்மை;
சென்று சென்று, அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்று ஆம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை; யார் உன்னை அறியகிற்பாரே?

8

பார், பதம், அண்டம், அனைத்தும், ஆய், முளைத்துப் படர்ந்தது ஓர் படர் ஒளிப்பரப்பே!
நீர் உறு தீயே! நினைவதேல், அரிய நின்மலா! நின் அருள் வெள்ளச்
சீர் உறு, சிந்தை எழுந்தது ஓர் தேனே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆர் உறவு எனக்கு, இங்கு? யார் அயல் உள்ளார்? ஆனந்தம் ஆக்கும் என் சோதி!

9

சோதியாய்த் தோன்றும் உருவமே! அரு ஆம் ஒருவனே! சொல்லுதற்கு அரிய
ஆதியே! நடுவே! அந்தமே! பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே!
தீது இலா நன்மைத் திருவருள் குன்றே! திருப்பெருந்துறை உறை சிவனே!
யாது நீ போவது ஓர் வகை? எனக்கு அருளாய் வந்து நின் இணை அடி தந்தே.

10

தந்தது, உன் தன்னை; கொண்டது, என் தன்னை; சங்கரா! ஆர் கொலோ, சதுரர்?
அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று, என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்! திருப்பெருந்துறை உறை சிவனே!
எந்தையே! ஈசா! உடல் இடம் கொண்டாய்; யான் இதற்கு இலன், ஓர் கைம்மாறே!