பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

அடைக்கலப் பத்து
வ.எண் பாடல்
1

செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்;
புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா,
அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே.

2

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச்
செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

3

பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத்
தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே
வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற
அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

4

பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

5

சுருள் புரி கூழையர் சூழலில் பட்டு, உன் திறம் மறந்து, இங்கு,
இருள் புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன்; மைத் தடம் கண்
வெருள் புரி மான் அன்ன நோக்கி தன் பங்க, விண்ணோர் பெருமான்,
அருள் புரியாய்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

6

மாழை, மைப் பாவிய கண்ணியர் வன் மத்து இட, உடைந்து,
தாழியைப் பாவு தயிர் போல், தளர்ந்தேன்; தட மலர்த் தாள்,
வாழி! எப்போது வந்து, எந் நாள், வணங்குவன் வல் வினையேன்?
ஆழி அப்பா! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

7

மின் கணினார், நுடங்கும் இடையார், வெகுளி வலையில் அகப்பட்டு,
புன் கணன் ஆய், புரள்வேனை, புரளாமல், புகுந்து அருளி,
என்கணிலே அமுது ஊறி, தித்தித்து, என் பிழைக்கு இரங்கும்
அம் கணனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

8

மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே
கூவிடுவாய்? கும்பிக்கே இடுவாய்? நின் குறிப்பு அறியேன்;
பா இடை ஆடு குழல் போல், கரந்து, பரந்தது, உள்ளம்.
ஆ! கெடுவேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

9

பிறிவு அறியா அன்பர், நின் அருள் பெய் கழல் தாள் இணைக் கீழ்,
மறிவு அறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பது ஓர்
நெறி அறியேன்; நின்னையே அறியேன்; நின்னையே அறியும்
அறிவு அறியேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.

10

வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு,
விழுங்குகின்றேன்; விக்கினேன் வினையேன், என் விதி இன்மையால்;
தழங்கு அரும் தேன் அன்ன தண்ணீர் பருகத் தந்து, உய்யக் கொள்ளாய்;
அழுங்குகின்றேன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.