பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருப்புலம்பல்
வ.எண் பாடல்
1

பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே,
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா, வெண் நீறு ஆடீ,
ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே, அடியேன், நின்
பூம் கழல்கள் அவை அல்லாது, எவை யாதும் புகழேனே!

2

சடையானே, தழல் ஆடீ, தயங்கு மூ இலைச் சூலப்
படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழ வெள்ளை
விடையானே, விரி பொழில் சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்,
உடையானே, உனை அல்லாது, உறு துணை மற்று அறியேனே!

3

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே!