பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

அற்புதப் பத்து
வ.எண் பாடல்
1

மையல் ஆய், இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டு,
தையலார் எனும் சுழித்தலைப் பட்டு, நான் தலை தடுமாறாமே,
பொய் எலாம் விட, திருவருள் தந்து, தன் பொன் அடி இணை காட்டி,
மெய்யன் ஆய், வெளி காட்டி, முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே!

2

ஏய்ந்த மா மலர் இட்டு, முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே,
சாந்தம் ஆர் முலைத் தையல் நல்லாரொடும் தலை தடுமாறு ஆகி,
போந்து, யான் துயர் புகாவணம் அருள்செய்து, பொன் கழல் இணை காட்டி,
வேந்தன் ஆய், வெளியே, என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பனே!

3

நடித்து, மண்ணிடை; பொய்யினைப் பல செய்து; நான், எனது, எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று; முன் வினை மிகக் கழறியே திரிவேனை,
பிடித்து, முன் நின்று, அப் பெரு மறை தேடிய அரும் பொருள், அடியேனை
அடித்து அடித்து, அக்காரம் முன் தீற்றிய அற்புதம் அறியேனே!

4

பொருந்தும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது; பொய்களே புகன்று போய்;
கரும் குழலினார் கண்களால் ஏறுண்டு; கலங்கியே கிடப்பேனை;
திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிட, திருவொடும் அகலாதே,
அரும் துணைவன் ஆய், ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

5

மாடும், சுற்றமும், மற்று உள போகமும், மங்கையர் தம்மோடும்
கூடி, அங்குள குணங்களால் ஏறுண்டு, குலாவியே திரிவேனை,
வீடு தந்து, என் தன் வெம் தொழில் வீட்டிட, மென் மலர்க் கழல் காட்டி,
ஆடுவித்து, எனது அகம் புகுந்து, ஆண்டது ஓர் அற்புதம் அறியேனே!

6

வணங்கும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, மங்கையர் தம்மோடும்
பிணைந்து, வாய் இதழ்ப் பெரு வெள்ளத்து அழுந்தி, நான் பித்தனாய்த் திரிவேனை,
குணங்களும், குறிகளும், இலாக் குணக் கடல் கோமளத்தொடும் கூடி,
அணைந்து வந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

7

இப் பிறப்பினில், இணை மலர் கொய்து, நான் இயல்பொடு அஞ்சு எழுத்து ஓதி,
தப்பு இலாது பொன் கழல்களுக்கு இடாது, நான், தட முலையார் தங்கள்
மைப்பு உலாம் கண்ணால், ஏறுண்டு கிடப்பேனை, மலர் அடி இணை காட்டி,
அப்பன், என்னை, வந்து, ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

8

ஊசல் ஆடும் இவ் உடல் உயிர் ஆயின இரு வினை அறுத்து, என்னை,
ஓசையால் உணர்வார்க்கு உணர்வு அரியவன், உணர்வு தந்து, ஒளி ஆக்கி,
பாசம் ஆனவை பற்று அறுத்து, உயர்ந்த தன் பரம் பெரும் கருணையால்
ஆசை தீர்த்து, அடியார் அடிக் கூட்டிய அற்புதம் அறியேனே!

9

பொச்சை ஆன இப் பிறவியில் கிடந்து, நான், புழுத்து அலை நாய்போல,
இச்சை ஆயின ஏழையர்க்கே செய்து, அங்கு இணங்கியே திரிவேனை,
விச்சகத்து, அரி, அயனும் எட்டாத, தன் விரை மலர்க் கழல் காட்டி,
அச்சன், என்னையும் ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!

10

செறியும் இப் பிறப்பு, இறப்பு, இவை நினையாது, செறி குழலார் செய்யும்
கிறியும், கீழ்மையும், கெண்டை அம் கண்களும், உன்னியே கிடப்பேனை,
இறைவன், எம்பிரான், எல்லை இல்லாத தன் இணை மலர்க் கழல் காட்டி,
அறிவு தந்து, எனை ஆண்டுகொண்டு, அருளிய அற்புதம் அறியேனே!