பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருவார்த்தை
வ.எண் பாடல்
1

மாது இவர் பாகன், மறை பயின்ற வாசகன், மா மலர் மேய சோதி,
கோது இல் பரம் கருணை, அடியார் குலாவும் நீதி குணம் ஆய நல்கும்,
போது அலர் சோலைப் பெருந்துறை, எம் புண்ணியன், மண்ணிடை வந்திழிந்து,
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே.

2

மால், அயன், வானவர் கோனும், வந்து வணங்க, அவர்க்கு அருள்செய்த ஈசன்,
ஞாலம் அதனிடை வந்திழிந்து, நல் நெறி காட்டி, நலம் திகழும்
கோல மணி அணி மாடம் ணீடு குலாவும் இடவை மட நல்லாட்கு,
சீலம் மிகக் கருணை அளிக்கும் திறம் அறிவார் எம்பிரான் ஆவாரே.

3

அணி முடி ஆதி அமரர் கோமான், ஆனந்தக் கூத்தன், அறு சமயம்
பணி வகை செய்து, படவு அது ஏறி, பாரொடு விண்ணும் பரவி ஏத்த,
பிணி கெட, நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன், பெண்பால் உகந்து,
மணி வலை கொண்டு, வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.

4

வேடு உரு ஆகி, மயேந்திரத்து மிகு குறை வானவர் வந்து, தன்னைத்
தேட இருந்த சிவபெருமான், சிந்தனை செய்து, அடியோங்கள் உய்ய,
ஆடல் அமர்ந்த பரிமா ஏறி, ஐயன், பெருந்துறை ஆதி, அந் நாள்
ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

5

வந்து, இமையோர்கள் வணங்கி ஏத்த, மாக் கருணைக் கடல் ஆய், அடியார்
பந்தனை விண்டு அற நல்கும், எங்கள் பரமன், பெருந்துறை ஆதி, அந் நாள்
உந்து திரைக் கடலைக் கடந்து, அன்று, ஓங்கு மதில் இலங்கை அதனில்,
பந்து அணை மெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே.

6

வேவ, திரிபுரம், செற்ற வில்லி, வேடுவன் ஆய், கடி நாய்கள் சூழ,
ஏவல் செயல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் தான், இயங்கு காட்டில்
ஏ உண்ட பன்றிக்கு இரங்கி, ஈசன், எந்தை, பெருந்துறை ஆதி, அன்று
கேவலம் கேழல் ஆய், பால் கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

7

நாதம் உடையது ஒர் நல் கமலப் போதினில் நண்ணிய நல் நுதலார்,
ஓதி, பணிந்து, அலர் தூவி, ஏத்த, ஒளி வளர் சோதி, எம் ஈசன்; மன்னும்,
போது அலர் சோலை, பெருந்துறை எம் புண்ணியன்; மண்ணிடை வந்து தோன்றி,
பேதம் கெடுத்து, அருள் செய் பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே.

8

பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன், போர் உகிர் வன் புலி கொன்ற வீரன்,
மாது நல்லாள், உமை மங்கை, பங்கன், வண் பொழில் சூழ் தென் பெருந்துறைக் கோன்,
ஏது இல் பெரும் புகழ் எங்கள் ஈசன், இரும் கடல் வாணற்குத் தீயில் தோன்றும்
ஓவிய மங்கையர் தோள் புணரும் உருவு அறிவார் எம்பிரான் ஆவாரே.

9

தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான், சோதி மயேந்திர நாதன், வந்து
தேவர் தொழும் பதம் வைத்த ஈசன், தென்னன், பெருந்துறை ஆளி, அன்று
காதல் பெருக, கருணை காட்டி, தன் கழல் காட்டி, கசிந்து உருக,
கேதம் கெடுத்து, என்னை ஆண்டருளும் கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே.

10

அம் கணன், எங்கள் அமரர் பெம்மான், அடியார்க்கு அமுதன், அவனி வந்த
எங்கள் பிரான், இரும் பாசம் தீர இக பரம் ஆயது ஒர் இன்பம் எய்த,
சங்கம் கவர்ந்து, வண் சாத்தினோடும், சதுரன், பெருந்துறை ஆளி, அன்று,
மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகை அறிவார் எம்பிரான் ஆவாரே.