பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பண்டு ஆய நான்மறை
வ.எண் பாடல்
1

பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும்,
கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக்
கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே!
உண்டாமோ கைம்மாறு? உரை.

2

உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன்
வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த,
கருவும் கெடும், பிறவிக் காடு.

3

காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்;
நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி,
அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம்,
மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து.

4

வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும்,
தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர்
சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை
நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர்.

5

நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல,
எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின்
மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக்
கழியாது இருந்தவனை, காண்.

6

காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என,
பேணும் அடியார் பிறப்பு அகல, காணும்
பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும்
பிரியானை, வாய் ஆரப் பேசு.

7

பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த
மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி,
பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல
மருந்தின் அடி என் மனத்தே வைத்து.