பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருத்தலைச்சங்காடு
வ.எண் பாடல்
1

நலச் சங்க வெண்குழையும் தோடும் பெய்து, ஓர்
நால்வேதம்
சொலச் சங்கை இல்லாதீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர் கொள் சோலைக் குயில் ஆலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயில் ஆகத் தாழ்ந்தீரே.

2

துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்!
மணி மல்கு கண்டத்தீர்! அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர்!
பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும்
தலைச்சங்கை,
அணி மல்கு கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

3

சீர் கொண்ட பாடலீர்! செங்கண் வெள் ஏற்று ஊர்தியீர்!
நீர் கொண்டும் பூக் கொண்டும் நீங்காத் தொண்டர் நின்று ஏத்த,
தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும்
தலைச்சங்கை,
ஏர் கொண்ட கோயிலே கோயில் ஆக இருந்தீரே.

4

வேடம் சூழ் கொள்கையீர்! வேண்டி நீண்ட வெண்திங்கள்
ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர்! தலைச்சங்கை,
கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடித் தோன்றும்
மாடம் சூழ் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

5

சூலம் சேர் கையினீர்! சுண்ண வெண் நீறு ஆடலீர்!
நீலம் சேர் கண்டத்தீர்! நீண்ட சடைமேல் நீர் ஏற்றீர்!
ஆலம் சேர் தண்கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை
கோலம் சேர் கோயிலே கோயில் ஆகக் கொண்டீரே.

6

நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று, ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார், போற்று ஓவார்,
சல நீதர் அல்லாதார், தக்கோர், வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

7

அடி புல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து, ஓர் அனல் ஏந்தி,
கொடி புல்கு மென்சாயல் உமை ஓர்பாகம் கூடினீர்!
பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச்சங்கை,
கடி புல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

8

திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென் இலங்கைக்
கோமானை,
வரை ஆர்ந்த தோள் அடர, விரலால் ஊன்றும்
மாண்பினீர்!
அரை ஆர்ந்த மேகலையீர்! அந்தணாளர் தலைச்சங்கை,
நிரை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நினைந்தீரே.

9

பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும், பைந்தாமரையானும்,
போய் ஓங்கிக் காண்கிலார்; புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வத் தலைச்சங்கை,
சேய் ஓங்கு கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

10

அலை ஆரும் புனல் துறந்த அமணர், குண்டர் சாக்கீயர்,
தொலையாது அங்கு அலர் தூற்ற, தோற்றம் காட்டி ஆட்கொண்டீர்!
தலை ஆன நால்வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை,
நிலை ஆர்ந்த கோயிலே கோயில் ஆக நின்றீரே.

11

நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை,
ஒளிரும் பிறையானை, உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.