பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கருப்பறியலூர்
வ.எண் பாடல்
1

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றுஅவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே.

2

வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.

3

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்
போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்ற
நாதன் என, நள் இருள் முன் ஆடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே.

4

மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன்,
உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒருகாலால்
கடந்தவன், இருப்பது கருப்பறியலூரே.

5

ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய
நிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆய
விருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஓதும்
கருத்தவன், இருப்பது கருப்பறியலூரே.

6

விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்
பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்
எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே.

7

ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்
சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்
தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே.

8

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

9

பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை
கரந்து, ஒர் சடைமேல் மிசை உகந்து அவளை வைத்து,
நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே.

10

அற்றம் மறையா அமணர், ஆதம் இலி புத்தர்,
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு,
குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே.

11

நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுளைப்
பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று,
வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.