பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும், வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர், கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன், சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார், அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,- நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர், எம்தமை உடையார், இளங்கோயிலே!
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறு வேறு விரித்த சடை இடை ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர், ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர், செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர், எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும், பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று; மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர், இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன், சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன், விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர், இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும், கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர், ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர், பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே; கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர், ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.
கடுக்கண்டன் கயிலாய மலைதனை எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற, விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர், இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.