பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநனிபள்ளி
வ.எண் பாடல்
1

ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன்; சொல்பொருள் ஆய்; சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன்; உமபர்தம் கோன்; உலகத்தினுள் எவ் உயிர்க்கும்
நாதியன்; நம்பெருமான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

2

உறவு இலி; ஊனம் இலி; உணரார் புரம் மூன்று எரியச்
செறி வி(ல்)லி; தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய
அற இலகும்(ம்) அருளான்; மருள் ஆர் பொழில், வண்டு அறையும்,
நற விரி கொன்றையினான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

3

வான் உடையான்; பெரியான்; மனத்தாலும் நினைப்பு அரியான்;
ஆன் இடை ஐந்து அமர்ந்தான்; அணு ஆகி, ஓர் தீ உருக் கொண்டு
ஊன் உடை இவ் உடலம்(ம்) ஒடுங்கிப் புகுந்தான்; பரந்தான்;
நான் உடை மாடு; எம்பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

4

ஓடு உடையன், கலனா; உடை கோவணவன்(ன்); உமை ஓர்-
பாடு உடையன்; பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன்; பயிலக்
காடு உடையன்(ன்), இடமா; மலை ஏழும், கருங்கடல் சூழ்
நாடு, உடை நம்பெருமான் நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

5

பண்ணற்கு அரியது ஒரு படை ஆழிதனைப் படைத்துக்
கண்ணற்கு அருள்புரிந்தான்; கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து, உகந்து,
நண்ணற்கு அரிய பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே

6

மல்கிய செஞ்சடைமேல் மதியும்(ம்) அரவும்(ம்) உடனே,-
புல்கிய ஆரணன், எம் புனிதன், புரிநூல் விகிர்தன்,
மெல்கிய வில்-தொழிலான், விருப்பன், பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான், நண்ணும் ஊர் நன்பள்ளி அதே.

7

அங்கம் ஓர் ஆறு அவையும்(ம்), அருமாமறை, வேள்விகளும்,
எங்கும் இருந்து அந்தணர் எரிமூன்று அவை, ஓம்பும் இடம்;
பங்கயமா முகத்தாள் உமை பங்கன் உறை கோயில்;
செங்கயல் பாயும் வயல்-திரு ஊர்-நனிபள்ளி அதே.

8

திங்கள் குறுந்தெரியல்-திகழ் கண்ணியன்-; நுண்ணியனாய்,
நம் கண் பிணி களைவான்; அரு மா மருந்து, ஏழ் பிறப்பும்;
மங்கத் திருவிரலால் அடர்த்தான், வல் அரக்கனையும்;
நங்கட்கு அருளும் பிரான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

9

ஏன மருப்பினொடும்(ம்) எழில் ஆமையும் பூண்டு, உகந்து,
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்;
ஊனம் இல் காழி தன்னுள்(ள்) உயர் ஞானசம்பந்தற்கு அன்று
ஞானம் அருள்புரிந்தான்; நண்ணும் ஊர்-நனிபள்ளி அதே.

10

காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி,
கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.