பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / ஆறாதாரம்
வ.எண் பாடல்
1

நாலும் இருமூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.

2

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தின்
மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி
போத அலயத்த விகாரம் தனில் போத
மேதாதி ஆதாரம் ஈது ஆன உண்மையே.

3

மேல் என்றும் கீழ் என்று இரண்டு அறக் காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.

4

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதாரம் ஆகவே தான் எழச் சாதித்தால்
ஆதாரம் செய் போகம் ஆவது காயமே.

5

ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறிக் கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே.

6

ஆகும் உடம்பும் அழிக்கின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே.

7

ஆயு மலரின் அணிமலர் மேல் அது
ஆய இதழும் பதினாறும் அங்கு உள
தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.