பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / காரிய காரண உபாதி
வ.எண் பாடல்
1

செற்றிடும் சீவ உபாதித் திறன் ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை
உற்றிடும் காரிய காரணத் தோடு அற
அற்றிட அச்சிவம் ஆகும் அணுவனே.

2

ஆறு ஆறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறு ஆய் நனவு மிகுத்த கனா நனா
ஆறா அகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறா நிலத்து உயிர் தொம் பதம் பேசிலே.

3

உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று
அயிர்ப்பு அறு காரணோ பாதி விதிரேகத்து
உயிர்ப்பு உறும் ஈசன் உபமிதத்தால் அன்றி
வியர்ப்பு உறும் ஆணவம் வீடல் செய்யாவே.

4

காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு
காரணம் ஏழில் கலக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொல் பதம்
பார் அறும் பாழில் பரா பரத் தானே.

5

முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்து உற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தான் ஆதல்
சத்திக்கு வித்துத் தனது உப சாந்தமே.