பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / சிவசொரூப தரிசனம்
வ.எண் பாடல்
1

ஓதும் மயிர்க்கால் தொறும் அமுது ஊறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை
வேதம் அது ஓதும் சொரூபி தன் மேன்மையே.

2

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க் கந்தம் துன்னி நின்றானே.

3

இணங்க வேண்டா இனி உலகோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும்
வணங்க வேண்டா வடிவை அறிந்தபின்
பிணங்க வேண்டா பிதற்றை ஒழியுமே.

4

துன்னி நின்றான் தன்னை உன்னி முன்னா இரு
முன்னி அவர் தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே.

5

மின் உற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன் உற்ற சோதித் தலைவன் இணை இலி
பொன் உற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என் உற்று அறிவான் என் விழித்தானே.

6

சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம்
சித்தத்தின் இல்லாச் சிவ ஆனந்தப் பேர் ஒளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்த துரியத்து உறு பேர் ஒளியே.

7

பரன் அல்ல நீடும் பரா பரன் அல்ல
உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல
தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும்
அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தாணே.

8

முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரம் தன்னுள் நின்று மா
சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுக ஆனந்த போதமே.

9

துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன்
உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.