பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / தீர்த்தம்
வ.எண் பாடல்
1

உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே.

2

தளி அறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளி அறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே.

3

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே.

4

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறை பதம் சென்று வலம் கொள்
மறியார் வளைக் கை வருபுனல் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே.

5

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
உடல் உற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இலர்
திடம் உற்ற நந்தி திரு அருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.

6

கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே.