பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / அதோமுக தரிசனம்
வ.எண் பாடல்
1

எம்பெருமான் இறைவா முறையோ என்று
வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல
அம் பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம் பகை கொல் என்ற தற்பரன் தானே.

2

அண்ட மொடு எண்திசை தாங்கும் அதோ முகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்
வெண் தலை மாலை விரிசடை யோற்கே.

3

செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே.

4

நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய
செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும்
முந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோ முகம் ஆமே.

5

அதோ முகம் கீழ் அண்டம் ஆன புராணன்
அதோ முகத் தன்னொடும் எங்கும் முயலும்
சதோ முகத்து ஒண்மலர்க் கண்ணிப் பிரானும்
அதோ முகன் ஊழித் தலைவனும் ஆமே.

6

அதோ முகம் மா மலர் ஆயது கேளும்
அதோ முகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோ முகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்து இருந்தானே.