பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / பிராணாயாமம்
வ.எண் பாடல்
1

ஐவர்க்கு நாயகன் அவ் ஊர்த் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.

2

ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள
வீசிப் பிடிக்கும் விரகு அறிவார் இல்லை
கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.

3

புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள் உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே.

4

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை
பிராணன் மடைமாறிப் பேச்சு அறிவித்துப்
பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே.

5

ஏறுதல் பூரகம் ஈர் எட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலு அதில்
ஊறுதல் முப்பத்து இரண்டு அதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே.

6

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திரு அருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனும் ஆமே.

7

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை
அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.

8

ஏற்றி இரக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறி அது ஆமே.

9

மேல் கீழ் நடுப்பக்கம் மிக்கு உறப் பூரித்துப்
பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து
மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே.

10

இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத் தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே.

11

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரி சடையோனே

12

கூடம் எடுத்துக் குடி புக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே.

13

பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண்டு ஆனையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டு ஆனைக்குப் பகல் இரவு இல்லையே