பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐயடிகள் காடவர்கோன் நாயனார் / சேத்திரத் திருவெண்பா
வ.எண் பாடல்
1

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே, உற்றாரும்
கோடுகின்றார்; மூப்புங் குறுகிற்று - நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.

2

கடுவடுத்த நீர்கொடுவா; காடிதா என்று
நடுநடுத்து நாஅடங்கா முன்னம் - பொடியடுத்த
பாழ்க்கோட்டஞ் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்
கீழ்க்கோட்டஞ் செப்பிக் கிட.

3

குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி, ஏங்கி, நுரைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

4

காளை வடிவொழிந்து கையுறவோ(டு) ஐயுறவாய்
நாளும் அணுகி நலியாமுன் - பாளை
அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்(கு) ஆளாய்க்
கவிழ்கமுகம் கூம்புகஎன் கை.

5

வஞ்சியன நுண்ணிடையார் வாள்தடங்கண் நீர்சோரக்
குஞ்சி குறங்கின்மேற் கொண்டிருந்து - கஞ்சி
அருத்தொருத்தி கொண்டுவா என்னாமுன் நெஞ்சே
திருத்துருத்தி யான்பாதஞ் சேர்.

6


காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து னமயெழுதி - மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.

7

மாண்டுவாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே
வேண்டுவா யாகி விரைந்தொல்லைப் - பாண்டவாய்த்
தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்
நின்னிடைவாய் வைத்து நினை.

8


தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாது
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே?
நெடுங்களத்தான் பாதம் நினை.

9

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு.

10


படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்(டு)
ஓடேந்தி யுண்ப துறும்.

11


குழீஇயிருந்த சுற்றம் குணங்கள்பா ராட்ட
வழீஇயிருந்த அங்கங்கள் எல்லாந் - தழீஇயிருந்தும்
என்னானைக் காவா இதுதகா தென்னாமுன்
தென்னானைக் காஅடைநீ சென்று.

12

குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.

13


காளையர்கள் ஈளையர்க ளாகிக் கருமயிரும்
பூளையெனப் பொங்கிப் பொலிவழிந்து - சூளையர்கள்
ஓகாளஞ் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனை
மாகாளங் கைதொழுது வாழ்த்து.

14


இல்லும் பொருளும் இருந்த மனையளவே
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியே நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.

15

அஞ்சனஞ்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க்
குஞ்சி வெளுத்துடலங் கோடாமுன் - நெஞ்சமே
போய்க்காடு கூடப் புலம்பாது, பூம்புகார்ச்
சாய்க்காடு கைதொழுநீ சார்ந்து.

16

இட்ட குடிநீர் இருநாழி ஒருழக்காச்
சட்டவொரு முட்டைநெய் தான்கலந்(து) - அட்ட
அருவாய்ச்சா றென்றங் கழாமுன்னம் பாச்சில்
திருவாச்சி ராமமே சேர்.

17


கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு நாறி
ஒழிந்த துடல்இரா வண்ணம் - அழிந்தது
இராமலையா கொண்டுபோ என்னாமுன் நெஞ்சே
சிராமலையான் பாதமே சேர்.

18


இழவாடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவாடி ஆவி விடாமுன்னம் - மழபாடி
ஆண்டானை ஆரமுதை அன்றயன்மால் காணாமை
நீண்டானை நெஞ்சே நினை.

19


உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் - கொள்ளிடத்தின்
தென்திருவாப் பாடியான் தெய்வமறை நான்கினையும்
தன்திருவாய்ப் பாடியான் தாள்.

20


என்னெஞ்சே உன்னை இரந்தும் உரைக்கின்றேன்
கன்னஞ்செய் வாயாகிற் காலத்தால் - வன்னஞ்சேய்
மாகம்பத் தானை உரித்தானை வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.

21


கரமூன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்
மரமூன்றி வாய்குதட்டா முன்னம் - புரம்மூன்றுந்
தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய
ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

22


தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்(டு)
எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன் - நஞ்சங்
கரந்துண்ட கண்டர்தம் ஒற்றியூர் பற்றி
இரந்துண் டிருக்கப் பெறின்.

23

நூற்றனைத்தோர் பல்லூழி நுண்வயிர வெண்குடைக்கீழ்
வீற்றிருந்த செல்வம் விழையாதே - கூற்றுதைத்தான்
ஆடரவங் கச்சா அரைக்கசைத்த அம்மான்தன்
பாடரவம் கேட்ட பகல்.

24


உய்யும் மருந்திதனை உண்மின் எனவுற்றார்
கையைப் பிடித்தெதிரே காட்டியக்காற் - மெல்ல
எழுந்திருமி யான்வேண்டேன் என்னாமுன் நெஞ்சே
செழுந்திரும யானமே சேர்.