பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நேச நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

சீர் வளர் சிறப்பின் மிக்க செயல் முறை ஒழுக்கம் குன்றா
நார் வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார் வளர் புகழின் மிக்க பழம்பதி; மதி தோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்பது ஆகும்.

2

அந் நகர் அதனில் வாழ்வார்; அறுவையர் குலத்து வந்தார்;
மன்னிய தொழிலில் தங்கள் மரபில் மேம்பாடு பெற்றார்;
பன்னக ஆபரணர்க்கு அன்பர் பணி தலைக்கொண்டு பாதம்
சென்னியால் கொண்டு போற்றும் தேசினார்; நேசர் என்பார்.

3

ஆங்கு அவர் மனத்தின் செய்கை அரன் அடிப்போதுக்கு ஆக்கி
ஓங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்சு எழுத்துக்கு ஆக்கி,
தாங்கு கைத்தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க்கு ஆகப்
பாங்கு உடை உடையும் கீளும் பழுதுஇல் கோவணமும் நெய்வார்.

4

உடையொடு நல்ல கீளும் ஒப்பு இல் கோவணமும் நெய்து,
விடையவர் அடியார் வந்து வேண்டு மாறு ஈயும் ஆற்றால்
இடை அறாது அளித்து, நாளும் அவர் கழல் இறைஞ்சி ஏத்தி,
அடைவு உறு நலத்தர் ஆகி, அரன் அடி நீழல் சேர்ந்தார்.

5

கற்றை வேணி முடியார் தம் கழல் சேர்வதற்குக் கலந்த வினை
செற்ற நேசர் கழல் வணங்கிச் சிறப்பால் முன்னைப் பிறப்பு உணர்ந்து
பெற்றம் உயர்த்தார்க்கு ஆலயங்கள் பெருக அமைத்து மண் ஆண்ட
கொற்ற வேந்தர் கோச்செங் கண் சோழர் பெருமை கூறுவாம்.