பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கீர்த்தித் திருஅகவல்
வ.எண் பாடல்
1-8

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
துன்னிய கல்வி தோற்றியும், அழித்தும்,
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும், சிறப்பும்,

9-20

மன்னும் மா மலை மயேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்;
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல் தடம் படிந்தும்;
கேவேடர் ஆகி, கெளிறு அது படுத்தும்;
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மயேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்தருளியும்;

21-34

நந்தம்பாடியில் நான்மறையோன் ஆய்,
அந்தம் இல் ஆரியன் ஆய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவும், வேறு வேறு இயற்கையும்,
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
ஏறு உடை ஈசன், இப் புவனியை உய்ய,
கூறு உடை மங்கையும் தானும் வந்தருளி,
குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசை,
சதிர்பட, சாத்து ஆய், தான் எழுந்தருளியும்;
வேலம்புத்தூர் விட்டேறு அருளி,
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்;
தர்ப்பணம் அதனில் சாந்தம்புத்தூர்
வில் பொரு வேடற்கு ஈந்த விளைவும்;
மொக்கணி அருளிய முழுத் தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்;

35-47

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்;
ஆண்டுகொண்டு அருள அழகு உறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று,
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது,
ஆண்டான் அங்கு ஓர் அருள்வழி இருப்ப,
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்;
அந்தணன் ஆகி, ஆண்டுகொண்டு அருளி,
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்;
மதுரைப் பெரு நல் மா நகர் இருந்து,
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்;
ஆங்கு, அது தன்னில், அடியவட்கு ஆக,
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்;

48-59

உத்தரகோசமங்கையுள் இருந்து,
வித்தக வேடம் காட்டிய இயல்பும்;
பூவணம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
தூ வண மேனி காட்டிய தொன்மையும்;
வாதவூரினில் வந்து, இனிது அருளி,
பாதச் சிலம்பு ஒலி காட்டிய பண்பும்;
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகி,
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும்;
பூவலம் அதனில் பொலிந்து, இனிது அருளி,
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்;
தண்ணீர்ப் பந்தர் சயம் பெற வைத்து,
நல் நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்;

60-69

விருந்தினன் ஆகி, வெண்காடு அதனில்,
குருந்தின் கீழ், அன்று, இருந்த கொள்கையும்;
பட்டமங்கையில் பாங்காய் இருந்து, அங்கு
அட்ட மா சித்தி அருளிய அதுவும்;
வேடுவன் ஆகி, வேண்டு உருக் கொண்டு,
காடு அது தன்னில், கரந்த கள்ளமும்;
மெய்க்காட்டிட்டு, வேண்டு உருக் கொண்டு,
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்;
ஓரியூரில் உகந்து, இனிது அருளி,
பார் இரும் பாலகன் ஆகிய பரிசும்;

70-76

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்;
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;

77-85

ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
சேவகன் ஆகி, திண் சிலை ஏந்தி,
பாவகம் பல பல காட்டிய பரிசும்;
கடம்பூர் தன்னில் இடம் பெற இருந்தும்;
ஈங்கோய் மலையில் எழில் அது காட்டியும்;
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்;

86-96

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்;
திருப்பனையூரில் விருப்பன் ஆகியும்;
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்;
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்;
புறம்பயம் அதனில் அறம் பல அருளியும்;
குற்றாலத்துக் குறியாய் இருந்தும்;
அந்தம் இல் பெருமை அழல் உருக் கரந்து,
சுந்தர வேடத்து ஒரு முதல் உருவு கொண்டு,
இந்திர ஞாலம் போல வந்தருளி,
எவெவர் தன்மையும் தன்வயின் படுத்து,
தானே ஆகிய தயாபரன், எம் இறை,

97-111

சந்திரதீபத்து, சாத்திரன் ஆகி,
அந்தரத்து இழிந்து வந்து, அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து, இருந்தருளியும்;
மந்திர மா மலை மயேந்திர வெற்பன்,
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரில்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
ஆனந்தம்மே, ஆறா அருளியும்;
மாதில் கூறு உடை மாப் பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்;
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்;
மூலம் ஆகிய மும் மலம் அறுக்கும்,

112-124

தூய மேனி, சுடர்விடு சோதி
காதலன் ஆகி, கழுநீர் மாலை
ஏல்வு உடைத்து ஆக, எழில் பெற, அணிந்தும்;
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன்
பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும்;
மீண்டு வாரா வழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம் பதி ஆகவும்,
பத்தி செய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊர் ஆகவும்,
ஆதிமூர்த்திகட்கு அருள்புரிந்தருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்,
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள் மலை ஆகவும்,

125-140

எப் பெரும் தன்மையும், எவெவர் திறனும்,
அப் பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி;
நாயினேனை நலம் மலி தில்லையுள்,
கோலம் ஆர்தரு பொதுவினில், வருக என,
ஏல, என்னை ஈங்கு ஒழித்தருளி;
அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற, உடன் கலந்தருளியும்;
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,
மால் அது ஆகி, மயக்கம் எய்தியும்,
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்,
கால் விசைத்து ஓடி, கடல் புக மண்டி,
நாத! நாத! என்று அழுது அரற்றி,
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக என்று
இதம் சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;

141-147

எழில் பெறும் இமயத்து இயல்பு உடை அம் பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம் நவில்
கனிதரு செவ் வாய் உமையொடு, காளிக்கு,
அருளிய திருமுகத்து, அழகு உறு சிறு நகை,
இறைவன், ஈண்டிய அடியவரோடும்,
பொலிதரு புலியூர்ப் புக்கு, இனிது அருளினன்
ஒலிதரு கைலை உயர் கிழவோனே.