பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்; விண்ணவர் போற்ற, கரை செய் மால் கடல் நஞ்சை உண்டவர்; கருதலர் புரங்கள் இரை செய்து ஆர் அழலூட்டி, உழல்பவர், இடுபலிக்கு; எழில் சேர் விரை செய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடுவினை தீர்க்கும், கொத்தின் தாழ்சடை முடிமேல் கோள் எயிற்று அரவொடு பிறையன்; பத்தர் தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன்; பைம்புனல் பதித்த வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
அடையும் வல்வினை அகல அருள்பவர், அனல் உடை மழுவாள படையர், பாய் புலித்தோலர், பைம்புனக் கொன்றையர், படர் புன் சடையில் வெண்பிறை சூடித் தார் மணி அணி தரு தறுகண் விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
பண்டு நாம் செய்த வினைகள் பறைய, ஓர் நெறி அருள் பயப்பார்; கொண்டல் வான்மதி சூடி; குரை கடல் விடம் அணி கண்டர் வண்டு மா மலர் ஊதி மது உண, இதழ் மறிவு எய்தி விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
சுழித்த வார் புனல் கங்கை சூடி, ஒர் காலனைக் காலால் தெழித்து, வானவர் நடுங்கச் செற்றவர்; சிறை அணி பறவை கழித்த வெண்தலை ஏந்தி; காமனது உடல் பொடி ஆக விழித்தவர் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
தொல்லை வல்வினை தீர்ப்பார்; சுடலை வெண்பொடி அணி சுவண்டர்; எல்லி சூடி நின்று ஆடும் இறையவர்; இமையவர் ஏத்த, சில்லை மால்விடை ஏறி, திரிபுரம் தீ எழச் செற்ற வில்லினார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார்; முறி கொள் மேனி முக்கண்ணர்; முளைமதி நடு நடுத்து இலங்க, பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர்; வெண்பொடிப்பூசி வெறி கொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால்வரை எடுக்க, கண் எலாம் பொடிந்து அலற, கால்விரல் ஊன்றிய கருத்தர்; தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடை முடிச் சதுரர் விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
தேடித்தான், அயன் மாலும், திருமுடி அடி இணை காணார்; பாடத்தான் பல பூதப்படையினர்; சுடலையில் பலகால் ஆடத்தான் மிக வல்லர்; அருச்சுனற்கு அருள் செயக் கருதும் வேடத்தார் திருத் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே.
சடம் கொள் சீவரப்போர்வைச் சாக்கியர், சமணர், சொல் தவிர, இடம் கொள் வல்வினை தீர்க்கும்; ஏத்துமின் இருமருப்பு ஒருகைக் கடம் கொள் மால் களிற்று உரியர், கடல் கடைந்திடக் கனன்று எழுந்த விடம் கொள் கண்டத்தர், தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரே!
வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளி அம் குன்று அமர்ந்தாரை, கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன், சந்தம் ஆயின பாடல் தண்தமிழ் பத்தும் வல்லார்மேல், பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.