பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

வெந்த குங்கிலியப்புகை விம்மவே
கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர்
சந்தமால், அவர் மேவிய சந்தமே.

2

வான் இலங்க விளங்கும் இளம்பிறை-
தான் அலங்கல் உகந்த தலைவனார்
கான் இலங்க வரும் கழிப்பாலையார்
மான் நலம் மடநோக்கு உடையாளொடே.

3

கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?

4

பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
தண் அலங்கல் உகந்த தலைவனார்
கண் நலம் கவரும் கழிப்பாலையுள
அண்ணல்; எம் கடவுள்(ள்) அவன் அல்லனே?

5

ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்,
காரின் ஆர் பொழில் சூழ், கழிப்பாலை எம்
சீரினார் கழலே சிந்தை செய்(ம்)மினே!

6

துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.

7

மண்ணின் ஆர் மலி செல்வமும், வானமும்,
எண்ணி, நீர் இனிது ஏத்துமின்-பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்ற முக்
கண்ணினார், உறையும் கழிப்பாலையே!

8

இலங்கை மன்னனை ஈர்-ஐந்து இரட்டிதோள
துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
கலங்கள் வந்து உலவும், கழிப்பாலையை
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

9

ஆட்சியால் அலரானொடு மாலும் ஆய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்;
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால்-தொழுவார் வினை மாயுமே.

10

செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!

11

அம் தண் காழி அருமறை ஞானசம்-
பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வான் உலகு ஆடல் முறைமையே.