பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநீலக்குடி
வ.எண் பாடல்
1

வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செத்தபோது, செறியார் பிரிவதே;
நித்தம் நீலக்குடி அரனை(ந்) நினை
சித்தம் ஆகில், சிவகதி சேர்திரே.

2

செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

3

ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு-
கூற்றன்; மேனியில் கோலம் அது ஆகிய
நீற்றன் நீலக்குடி உடையான்; அடி
போற்றினார் இடர் போக்கும் புனிதனே.

4

நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
ஆலன்; ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
நீலன் -நீலக்குடி உறை நின்மலன்;
காலனார் உயிர் போக்கிய காலனே.

5

நேச நீலக்குடி அரனே! எனா
நீசராய், நெடுமால் செய்த மாயத்தால்,
ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்,
நாசம் ஆனார், திரிபுரநாதரே.

6

கொன்றை சூடியை, குன்றமகளொடும்
நின்ற நீலக்குடி அரனே! எனீர்-
என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்;
பொன்றும் போது நுமக்கு அறிவு ஒண்ணுமே?

7

கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால்,
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

8

அழகியோம்; இளையோம் எனும் ஆசையால்
ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே,
நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
கழல் கொள் சேவடி கைதொழுது, உய்ம்மினே!

9

கற்றைச் செஞ்சடைக் காய் கதிர் வெண் திங்கள்
பற்றிப் பாம்பு உடன் வைத்த பராபரன்
நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்;
சுற்றித் தேவர் தொழும் கழல் சோதியே.

10

தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
அரக்கனார் உடல் ஆங்கு ஓர் விரலினால்
நெரித்து, நீலக்குடி அரன், பின்னையும்
இரக்கம் ஆய், அருள் செய்தனன் என்பரே.