பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கடவூர்மயானம்
வ.எண் பாடல்
1

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
உழையர்தாம்-கடவூரின் மயானத்தார்;
பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
பிழையும் தீர்ப்பர், பெருமான் அடிகளே.

2

உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
கன்னல், தேன் கடவூரின் மயானத்தார்;
தன்னை நோக்கித் தொழுது எழுவார்க்கு எலாம்
பின்னைழு என்னார், பெருமான் அடிகளே.

3

சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர்,
ஆலம் உண்டு அமுதே மிகத் தேக்குவர்,
காலகாலர்-கடவூர் மயானத்தார்;
மாலை மார்பர், பெருமான் அடிகளே.

4

இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்
மறவனார்-கடவூரின் மயானத்தார்;
அறவனார், அடியார் அடியார் தங்கள்
பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.

5

கத்து காளி கதம் தணிவித்தவர்,
மத்தர்தாம்-கடவூரின் மயானத்தார்;
ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார், ஒரு
பித்தர்காணும், பெருமான் அடிகளே.

6

எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர்,
கரியர்தாம்-கடவூரின் மயானத்தார்;
அரியர், அண்டத்து உளோர் அயன் மாலுக்கும்;
பெரியர்காணும், பெருமான் அடிகளே.

7

அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை
கணங்கள் சேர் கடவூரின் மயானத்தார்;
வணங்குவார் இடர் தீர்ப்பர், மயக்கு உறும்
பிணம் கொள் காடர் - பெருமான் அடிகளே.

8

அரவு கையினர், ஆதி புராணனார்-
மரவு சேர் கடவூரின் மயானத்தார்;
பரவுவார் இடர் தீர்ப்பர், பணி கொள்வர்,
பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.