பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமணஞ்சேரி
வ.எண் பாடல்
1

பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
நட்டம் நின்று நவில்பவர்-நாள்தொறும்
சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
வட்டவார் சடையார்; வண்ணம் வாழ்த்துமே!

2

துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார் சடைமேல் பிறை வைத்தவர்,
மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை,
உன்னுவார் வினை ஆயின ஓயுமே.

3

புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்;
தெற்றினார் புரம் தீ எழச் செற்றவர்-
சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்;
பற்றினார் அவர் பற்று, அவர்; காண்மினே!

4

மத்தமும் மதியும் வளர் செஞ்சடை
முத்தர்; முக்குணர்; மூசு அரவம் அணி
சித்தர்; தீவணர்-சீர் மணஞ்சேரி எம்
வித்தர்; தாம் விருப்பாரை விருப்பரே.

5

துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்;
வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;-
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

6


நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்-
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்;
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.

7

சுண்ணத்தர்; சுடுநீறு உகந்து ஆடலார்;
விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்-
மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்;
வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே.

8

துன்ன ஆடையர், தூ மழுவாளினர்;
பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்-
மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.

9

சித்தர், தேவர்கள், மாலொடு, நான்முகன்
புத்தர் தேர் அமண்கையர்-புகழவே,
மத்தர்தாம் அறியார், மணஞ்சேரி எம்
அத்தனார்; அடியார்க்கு அல்லல் இல்லையே.

10

கடுத்த மேனி அரக்கன், கயிலையை
எடுத்தவன், நெடு நீள் முடிபத்து இறப்
படுத்தலும், மணஞ்சேரி, அருள்! எனக்
கொடுத்தனன், கொற்றவாளொடு நாமமே