பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருக்கழுமலம்
வ.எண் பாடல்
1

சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து, தன் அருள் தந்த எம் தலைவனை; மலையின்
மாதினை மதித்து, அங்கு ஒர் பால் கொண்ட மணியை; வருபுனல் சடை இடை வைத்த எம்மானை;
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை; எண் வகை ஒருவனை; எங்கள் பிரானை;
காதில் வெண்குழையனை; கடல் கொள மிதந்த கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

2

மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன்; வருந்தல் உற்றேன்; மறவா வரம் பெற்றேன்;
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன்; துணை என்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை,
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

3

திருத் தினைநகர் உறை சேந்தன் அப்பன்(ன்), என் செய்வினை அறுத்திடும் செம்பொனை, அம் பொன்
ஒருத்தனை, அல்லது இங்கு ஆரையும் உணரேன்; உணர்வு பெற்றேன், உய்யும் காரணம் தன்னால்;
விருத்தனை, பாலனை, கனவு இடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்;
கருத்தனை, நிருத்தம் செய் காலனை, வேலைக் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

4

மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
பிழைத்து ஒரு கால் இனிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன்; பெற்றது ஆர் பெறுகிற்பார்?
குழைக் கருங்கண்டனைக் கண்டு கொள்வானே பாடுகின்றேன்; சென்று கூடவும் வல்லேன்;
கழைக் கரும்பும் கதலிப் பலசோலை கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

5

“குண்டலம் குழை திகழ் காதனே!” என்றும், “கொடு மழுவாள் படைக் குழகனே!” என்றும்,
“வண்டு அலம்பும் மலர்க் கொன்றையன்!” என்றும், வாய் வெருவித் தொழுதேன், விதியாலே;
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்று ஆய், பசுபதி பதி வினவி, பலநாளும்,
கண்டல் அம் கழிக் கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

6

“வரும், பெரும் வல்வினை” என்று இருந்து எண்ணி, வருந்தல் உற்றேன்; மறவா மனம் பெற்றேன்;
விரும்பி, என் மனத்து இடை மெய் குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன், விதியாலே;
அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன், என் பிறவி வேர் அறுக்கும்
கரும்பினை, பெருஞ் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

7

அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள் சாயலுள் அடையல் உற்று இருந்தேன்-
முயல்பவர் பின் சென்று, “முயல் வலை யானை படும்” என மொழிந்தவர் வழி முழுது எண்ணி;
புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என் இடைப் பொருளை,
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

8

நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக, நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண்சுடரை;
மனை தரு மலை மகள் கணவனை; வானோர் மாமணி மாணிக்கத்தை(ம்); மறைப்பொருளை;
புனைதரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும், “ஒருவன்” என்று உணர்வு அரியவனை;
கனை தரு கருங்கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர்க் கண்டுகொண்டேனே .

9

மறை இடைத் துணிந்தவர் மனை இடை இருப்ப, வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய,
துறை உறக் குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தக வின்மையை ஓரேன்;
பிறை உடைச் சடையனை, எங்கள் பிரானை, பேர் அருளாளனை, கார் இருள் போன்ற
கறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன் கழுமல வள நகர்க் கண்டு கொண்டேனே .

10

செழு மலர்க் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர்க் கண் இணை அடியவர்க்கு அல்லால், அறிவு அரிது, அவன் திருவடியிணை இரண்டும்;
கழுமல வள நகர்க் கண்டுகொண்டு, ஊரன்-சடையன் தன் காதலன்-பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையும் சூழகிலாவே .