பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / அருளொளி
வ.எண் பாடல்
1

அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா தார்
அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே.

2

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.

3

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையைக்
கூடிய வாறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

4

உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்
பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி
அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே.

5

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே.

6

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள்
ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே.

7

புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி
அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணித் திகைத்து இருந்தேனே.

8

அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானைத்
தெருள் உறும் பின்னைச் சிவகதி ஆமே.

9

கூறுமின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப் பொருள் நீக்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே.