பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / முத்துரியம்
வ.எண் பாடல்
1

நனவு ஆதி மூன்றினில் சீவ துரியம்
தனது ஆதி மூன்றினில் பர துரியம் தான்
நனவு ஆதி மூன்றினில் சிவ துரியம் ஆம்
இனது ஆகும் தொந்தத் தசி பதத்து ஈடே.

2

தானா நனவில் துரியம் தன் தொம் பதம்
தான் ஆம் துரிய நனவு ஆதி தான் மூன்றில்
ஆனாப் பர பதம் அற்ற தரு நனா
வான் ஆன மேல் மூன்றும் துரியம் அணுகுமே.

3

அணுவின் துரியத்து நான்கும் அது ஆகிப்
பணியும் பரதுரியம் பயில் நான்கும்
தணிவில் பரம் ஆகிச் சார் முத்துரியக்
கணுவில் இந்நான்கும் கலந்த ஈர் ஐந்தே.

4

ஈர் ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்
நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று
பார் அந்தம் ஆன பரா பரத்து அயிக்கியத்து
ஓர் அந்தம் ஆம் இரு பாதியைச் சேர்த்திடே.

5

தொட்டே இருமின் துரிய நிலத்தினை
எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனைப்
பட்டு ஆங்கு அறிந்திடில் பல் நா உதடுகள்
தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே.

6

அறிவாய் அசத்து என்னும் மாறா அகன்று
செறிவு ஆய மாயை சிதைத்து அருளாலே
பிரியாத பேர் அருள் ஆயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலை அறிந்தாரே.

7

நனவின் நனவு ஆதி நால் ஆம் துரியம்
தனது உயிர் தொம் பதம் ஆமாறு போல
வினை அறு சீவன் நனவு ஆதி ஆகத்து
அனைய பர துரியம் தற் பதமே.

8

தொம் பதம் தற்பதம் சொல் முத்துரியம் போல்
நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம்
அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலைச்
செம் பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே.