பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / திருக்கூத்துத் தரிசனம் / சுந்தரக் கூத்து
வ.எண் பாடல்
1

அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால்
உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல்
கண்டம் கரியான் கருணை திரு உருக்
கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே.

2

கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார
நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும்
திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை
வடம் உற்றமாவனம் மன்னவன் தானே.

3

பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே.

4

அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில்
தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில்
சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல்
பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே.

5

ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக்
கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.

6

சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும்
முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும்
சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே.

7

மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும்
தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே.