பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டுச் சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே.
சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும் எந்தை இவன் அல்ல யாமே உலகினில் பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய அந்தம் இலானும் அருள் புரிந்தானே.
அப்பரிசே அயனார் பதி வேள்வியுள் அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே.
அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள் அப்பரிசே அவர் ஆகிய காரணம் அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு அப்பரிசு ஆகி அலர்ந்து இருந்தானே.
அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக் குலம்தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச் சிவந்த பரம் இது சென்று கதுவ உவந்த பெருவழி ஓடி வந்தானே.
அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே வருமதி வாலை வன்னி நல் இந்திரன் சிர முக நாசி சிறந்த கை தோள் தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே.
செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர் அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச் செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவி மந்திரம் கொல் கொடியது ஆமே.
நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப் பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச் சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே.