பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / குரு நிந்தை
வ.எண் பாடல்
1

பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள்
உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர்
கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர்
பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.

2

ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய
சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.

3

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தம் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதா நந்தி ஆணையே.

4

மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறு உரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

5

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும்
நாசம் அது ஆகுமே நந் நந்தி ஆணையே.

6

சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு
பல் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே.

7

கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக்
கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே.