பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / பிரத்தியாகாரம்
வ.எண் பாடல்
1

கண்டுகண்டு உள்ளே கருத்து உற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ளே குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே.

2

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கு மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடி இருந்தானே.

3

மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலி உள் எழும் செம் சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

4

நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம்
நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மா சித்த மா யோகம் வந்து தலைப் பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே

5

சோதி இரேகைச் சுடர் ஒளி தோன்றிடில்
கோது இல் பரானந்தம் என்றே குறிக் கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால்
ஓதுவது உன் உடல் உன் மத்தம் ஆமே.

6

மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு
மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு
வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு
காலத்தை வெல்லும் கருத்து இது தானே.

7

எரு இடும் வாசற்கு இருவிரல் மேலே
கரு இடும் வாசற்கு இருவிரல் கீழே
உரு இடும் சோதியை உள்க வல்லார்க்குக்
கரு இடும் சோதி கலந்து நின்றானே.

8

ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப்
பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால்
பிரத்தி ஆகாரப் பெருமையை அது ஆமே.

9

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணம்
திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே
புறப்பட்டுப் போகான் பெரும் தகையானே.