பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சொல் விளங்கும் சீர்த் தொண்டைநல் நாட்டிடை மல்லல் நீடிய வாய்மை வளம்பதி பல்பெரும் குடி நீடு பரம்பரைச் செல்வம் மல்கு திருமயிலா புரி.
நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்.
கலம் சொரிந்த கரிக் கன்று முத்து அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா; சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்.
தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் துவள் பதாகை நுழைந்து அணை தூமதி பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்கும் ஆல்.
வீதி எங்கும் விழா அணிக் காளையர் தூது இயங்கும்; சுரும்பு, அணி தோகையர் ஓதி எங்கும் ஒழியா; அணி நிதி பூதி எங்கும் புனை மணி மாடங்கள்.
மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார்; தன்மை வாயிலார் என்னும் தபோதனர்.
வாயிலார் என நீடிய மாக்குடித் தூய மா மரபின் முதல் தோன்றியே நயனார் திருத்தொண்டின் நயப்பு உறு மேய காதல் விருப்பின் விளங்குவார்.
மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள் இருத்தி, உறஆதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி, இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி, அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்.
நீர் ஆரும் சடையாரை நீடுமன ஆலயத்துள் ஆராத அன்பினால் அர்ச்சனை செய்து அடியவர்பால் பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச் சீர் ஆரும் திரு நீடூர் முனை அடுவார் திறம் உரைப்பாம்.