பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பத்தாராய்ப் பணிவார் புராணம்
வ.எண் பாடல்
1

ஈசனுக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்.

2

தா அரிய அன்பினால் சம்பு வினை எவ்இடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்.

3

அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வு அரிய சரண் சாரும் தவம் உடையார்.

4

யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறு உயர்த்தார்
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்கு ஆம் பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எலாம் போதாவால்.

5

சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங் கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங் கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்.

6

ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந்தாரை
மாசு இலா நீறு அழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார்; மெய்க் குணம் மிக்கார்.

7

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்று ஆடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டர் ஆம் குணம் மிக்கார்.

8

சங்கரனுக்கு ஆள் ஆன தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார்; படி விளக்கும் பெருமையினார்
அங் கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்.